nelson pt web
சினிமா

”ஜெயிலர் பார்த்துட்டு ரஜினி சார் முதலில் சொன்ன அந்த வார்த்தை” - இயக்குநர் நெல்சன் நெகிழ்ச்சி!

Angeshwar G

ஜெயிலர் திரைப்படம் வெளியாகி தமிழ்நாடெங்கும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள சூழலில் அனைத்து தரப்பு மக்களாலும் அத்திரைப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 375 கோடியே 40 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது. இத்தகவலை சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

'ஜெயிலர்' திரைப்படம் முதல் வாரத்தில் ரூ.375.40 கோடி வசூலித்து சாதனை

இந்நிலையில், ஜெயிலர் திரைப்படக் குழுவினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். விழாவில் படத்தின் இயக்குநர் நெல்சன், மற்ற நடிகர்கள் என பலர் கலந்து கொண்டனர். விழாவில் இயக்குநர் நெல்சன் பேசுகையில், “ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. படம் வெற்றி பெற வேண்டும் என்பதையும் தாண்டி அது நன்றாக வரவேண்டும் என்பது தான் நோக்கமாக இருந்தது. அப்படி கதையை உருவாக்கிய போது அதை நன்றாக எடுத்துவிட வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. இந்த திரைப்படத்தின் முழு வெற்றிக்கு காரணம் ரஜினி சாரின் பவர், ஆரா போன்றவைகள் தான் காரணம்.

நடிகர்களுக்கு பல இடங்களில் நன்றி சொன்னாலும் இதில் பணிபுரிந்த தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். டிஓபி விஜய் கார்த்திக், எடிட்டர் நிர்மல், கலை இயக்குநர் கிரண், ஆடை வடிவமைப்பாளர் பல்லவி, சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் சிவா, நடன பயிற்சியாளர் ஜானி மாஸ்டர் போன்றோருக்கு நன்றி சொல்ல வேண்டும். தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் அவர்களுக்கும் நன்றி.

அனைத்தையும் தாண்டி படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. தமிழ்நாடு தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா வெளியான அனைத்து இடங்களிலும் நேர்மறையான விமர்சனங்கள் வந்துள்ளது. மக்கள் பாராட்டுகிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் ரஜினி சாருக்கு இந்த கதையின் மீதிருந்த நம்பிக்கை தான். படம் வெளியாவதற்கு மூன்று நாள் முன்பு அவருக்கு மட்டும் திரையிட்டுக் காட்டினோம். படம் பார்த்த அவரிடம் அது குறித்து கேட்டேன். படத்தின் கதையை கேட்ட போது உங்களது மனதில் காட்சிகள் வந்திருக்கும். அது போல் படம் வந்துள்ளதா என கேட்டேன். அதற்கு அவர், “நான் நினைத்ததை விட 10 மடங்கு அதிகமாக வந்துள்ளது. படம் நன்றாக வரும் என தெரியும். இந்த மாதிரி வரும் என நினைக்கவில்லை என்று கூறினார். எனக்கு இன்று இருக்கிற திருப்தி அன்றே வந்துவிட்டது.

நம்மை அதிகமானோர் சந்தேகத்துடன் பார்க்கும் போது படம் சரியாக நடக்குமா நடக்காதா என்ற யோசனை வரும். அனைத்திற்கும் முக்கிய புள்ளியாக இருக்கும் ஆள் நம்மை நம்பி, அவரது இமேஜ், நட்சத்திர அந்தஸ்து அனைத்தையும் வெளியில் வைத்து நாம் சொல்வதை மட்டும் கேட்டு இத்திரைப்படம் சரியாக வந்ததற்கு முக்கிய காரணம் அவர் தான்.

நேரில் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி சொல்ல காத்திருக்கோம். விரைவில் வாருங்கள்” என்றார்.