சினிமா

காவல்துறையின் தடியடி 'மனித வதை'... இயக்குநர் பாரதிராஜா கண்டனம்

webteam

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை மனிதவதையாக பார்ப்பதாக இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போராடுவது மக்களின் மரபு என கூறியுள்ளார். மரபு வழியில் போராடிய இளைஞர்கள் மீது காவல்துறை மிரட்டியும், லத்தியால் அடித்தும், எட்டி மிதித்தும் இழுத்துச் செல்வதை பார்க்கும்போது ஒட்டுமொத்த தமிழர்களின் மீதான தாக்குதலாகவும், மனிதவதையாகவும் பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

உலகின் உள்ள இனங்களில் தமிழ் இனம் தான், பண்பாட்டிற்கும் கலாசாரத்திற்கும் சகிப்புத்தன்மைக்கும் முன்னோடிகள் என பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். அப்படிப்பட்ட தமிழ் மக்களை வேல்கொண்டு பாய்ச்சி காயப்படுத்தவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் பாரதிராஜா வலியுறுத்தியுள்ளார்.