சினிமா

“பாலாவின் ‘வர்மா’ கைவிடப்படுகிறது” - பட நிறுவனம் திடீர் அறிவிப்பு

rajakannan

நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவான ‘வர்மா’ திரைப்படம் கைவிடப்படுவதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.  

பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள திரைப்படம் ‘வர்மா’. இந்தப் படத்தின் மூலம் துருவ் முதன்முறையாக திரைத்துறையில் புதுமுக நடிகராக அறிமுகமாக இருந்தார். 

இந்தப் படம் 2017ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’யின் ரீமேக் ஆகும். தெலுங்கில் விஜய் தேவேரகொண்டா நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்திருந்தார். அந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகவும் பேசப்பட்டது. ஆகவே அதனை தமிழில் எடுக்க முடிவு செய்தார் இயக்குநர் பாலா. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. காட்மாண்ட், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. 

            
 
இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில் நடிகர் துருவ், தாடியும் மீசையுமாக பைக்கில் வலம் வருவதைபோல காட்சி இடம் பெற்றிருந்தது. ஆனால் இந்த போஸ்டரை கண்ட திரை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கடுமையான எதிர்ப்புகளை பதிவிட்டனர். ஆனால், வர்மா படத்தின் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ட்ரெய்லரின் துருவ் மிகவும் இளமையாக காட்சி அளித்தார். அதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. 

இந்நிலையில், பாலா இயக்கிய ‘வர்மா’ திரைப்படத்தை கைவிடுவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அர்ஜுன் ரெட்டி படத்திற்கும் பாலா எடுத்துள்ள படத்திற்கு நிறைய கிரியேட்டிவ் வித்தியாசங்கள் இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, புதிய டீம் உடன் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தமிழில் மீண்டும் எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. புதிய அணியில் துருவ் மட்டும் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகில் மிகவும் முக்கியமான இயக்குநராக கருதப்படும் பாலா எடுத்த திரைப்படம் கைவிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.