Raayan trailer PT
சினிமா

செம்ம ராவ்வா இருக்கு! வெற்றிமாறன் பாணியில் இறங்கிஅடிக்கும் தனுஷ்! ஆக்‌ஷனில்மிரட்டும் ராயன் ட்ரெய்லர்

Rajakannan K

நடிகர் தனுஷ் தானே இயக்கி நடித்து முடித்துள்ள ராயன் படம் வரும் ஜூலை 26 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியான அவரது 25 ஆவது படம் வேலையில்லா பட்டதாரி மெகா ஹிட் அடித்தது. அந்த வரிசையில் தனுஷ் நடிப்பில் வெளியாகும் 50 ஆவது படமான ராயன் மீது கூடுதல் எதிர்ப்பு உள்ளது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷுடன் எஸ்ஜே. சூர்யா , பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், சரவணன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, செல்வராகவன் என பெரிய நடிகர்கள் பட்டாளமே களமாடியிருக்கிறார்கள்.

வன்முறை காட்சிகள் நிறைந்த படம் என்பதை முன்பு வெளியான போஸ்டர்களோடு, படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது அழுத்தமாக சொல்கிறது. படத்தின் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும் போஸ்டர்களாக தனுஷ் வெளியிட்ட விதமே கதையின் ஆழம் பற்றிய எதிர்பார்ப்பை கூட்டியது.

இந்தப் படம் மிகவும் எதார்த்தமான பாணியில் எடுக்கப்பட்டிருக்கும் என்பதையும் போஸ்டர்கள் காட்டியது. படத்தின் பாடல்கள் அனைத்தும் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில்தான், ராயன் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. ட்ரெய்லரின் மொத்த ஆன்மாவும் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை தாங்கி பிடிக்கிறது. ‘உசுரே நீதானே நீதானே’ என ட்ரெய்லரின் இறுதியில் ஏ.ஆர்.ரகுமான் குரல் வரும் அந்த வார்த்தைகள் நம்முடைய இதயத்தை ஒரு நொடி சிலர்க்க வைக்கிறது.

பயங்கரமாக உடுக்கை சத்தத்துடன் ரத்தக்கறை படிந்த தனுஷ் மீது துஷாரா தண்ணீர் ஊற்றி கழுவும் காட்சியுடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து செல்வராகவன் தனக்கு அருகில் இருக்கும் சிறுவனிடம் உரையாடுவது போல் வரும்.

அநேகமாக அது கதையில் சிறுவயது தனுஷ் கதாபாத்திரமாக இருக்கக் கூடும். செல்வராகவனும் இளம் வயது தோற்றத்தில் இருக்கிறார். அநேகமாக அது பிளாஷ் பேக் காட்சியாக இருக்கக் கூடும்.

“ராயா காட்டிலேயே ஆபத்தான மிருகம் எது தெரியுமா?” என்று செல்வராகவன் கேட்க, “சிங்கம் தான்” என்று அந்த சிறுவன் சொல்கிறான்.

பின்னர், “காட்டிலேயே பலமான மிருகம் சிங்கம், புலி தான். ஆனா ஆபத்தான மிருகம் ஓநாய்.

ஒத்தைக்கு ஒத்த நின்னா சிங்கம் ஓநாய அடிச்சிடும். ஆனால், ஓநாய் பயங்கர தந்தரவாதி கூட்டமா சுத்து போட்டு ஸ்கெட்ச் போட்டு சிங்கத்த அழிச்சிடும்” என்று செல்வராகவன் சொல்லும் போதும் பயங்கரமாக இருக்கிறது.

செல்வராகவன் இதை சொல்லிக் கொண்டிருக்கும் போதே எஸ்.ஜே.சூர்யா, சரவணன், பிரகாஷ்ராஜ் என அனைத்து கேரக்டர்களும் ஒவ்வொன்றாக வருகிறது. எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட அனைவருமே இயல்பான கெட்டப்பில் மிரட்டுகிறார்கள்.

பின்னர், “அவன் பெரிய ஆம்பள, பெரிய தைரியசாலினா இங்க வந்து போடச் சொல்லு” என்று எஸ்.ஜே.சூர்யா ஆக்ரோஷமாக சொல்கிறார். அப்பொழுது, கொஞ்சம் வயது முதிர்ந்த தோற்றத்தில் ராயன் குறித்து பில்டப் கொடுக்கிறார் செல்வராகவன்.

“வருவான், பேயி மாதிரி வருவான். எறங்கி செய்வான்” என்று சொல்லும் போது பின்னணியில் சண்டைக் காட்சிகள் பட்டையக் கிளப்புகின்றன.

பாட்ஷா படத்தில் வருவது போல் போலீஸ் ஸ்டேஷன் காட்சி ஒன்று வருகிறது. அதாவது, “வாயா ராயா போய் என்ன சொன்ன டப்புனு கேஸ வாபஸ் வாங்கிட்டான்” என்று போலீஸ் கேட்க, எதிரில் நிற்கும் தனுஷ் “கெஞ்சி கேட்டன் சார்..” என்று சாந்தமாக சொல்கிறார். அப்பொழுது நமக்கு பாட்ஷாவில் வருவது போல் உண்மைய சொன்னேன் என்று சொல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தனுஷ் நடிப்பு அட்டகாசமாக இருந்தது.

இறுதியில், ஏ.ஆர்.ரகுமான் குரலில் ‘உசுரே நீதானே நீதானே’ பாடல் ஒலிக்கும் போது மூன்று சிறுவர்கள் பின்னணியில் நடந்து செல்வார்கள். பாசமுள்ள மூன்று சகோதரர்களின் கதையே ராயன் என்று சொல்லப்படுகிறது. அவர்களுக்கு துஷாரா விஜயன் சகோதரியாக நடித்துள்ளதாகவும் தெரிகிறது. தனுஷ் போலீஸ் இன்ஃபாமராகவும் நடித்துள்ளதாக ஒரு தகவல். எப்படி இருந்தாலும் மிரட்டலாக வெளியாகியுள்ள ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை நூறு மடங்கு அதிர்கரித்து இருக்கிறது.