சினிமா

டிக்டாக், ஹலோ கணக்கை டெலிட் செய்துவிட்டேன் - ஜிப்ரான் ட்வீட்

webteam

இசையமைப்பாளர் ஜிப்ரான், தனது டிக்டாக் மற்றும் ஹலோ கணக்கை டெலிட் செய்துவிட்டதாக கூறியுள்ளார்.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்திய - சீன ராணுவ வீரர்கள் இடையே கடுமையான தாக்குதல் ஏற்பட்டது. இந்தத் தாக்குதலில் இந்தியா தரப்பில் கர்னல் ஒருவர் உட்பட 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் நான்கு வீரர்கள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எல்லையில் பதற்றமான சூழல் அதிகரித்த நிலையில், இருநாட்டு படையினரும் எல்லைப் பகுதியில் இருந்து தங்களது படைகளை விலக்கிக் கொண்டனர். 

இதன்பிறகு இந்திய- சீன வெளியுறவுதுறை அமைச்சர்கள் நேற்று தொலைபேசி வழியே உரையாடலை மேற்கொண்டனர். அதன் பின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனாவின் தாக்குதல் திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளது என்றார். இதனையொட்டி சமூக வலைத்தளங்களில் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, சீன உணவுகளை இந்திய மக்கள் புறக்கணிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், சீன உணவுகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிப்ரான், தனது டிக்டாக் மற்றும் ஹோலோ செயலியை டெலிட் செய்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அவரது கணக்கு டெலிட் செய்யப்பட்டதற்கான ஆதார கடிதத்தை அவர் தனது பதிவுடன் இணைத்துள்ளார். சீனாவிற்கு எதிரான பிரச்சாரத்தினை ஒட்டியே இவர் தனது கணக்கை திரும்ப பெற்றுள்ளார். அதற்காக அவரைப் பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால் இதற்கு மாறாக மற்றொரு தரப்பினர் அவரை விமர்சித்து கருத்திட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.