சினிமா

“14 வயது பெண்ணுக்கு சித்ரவதை” - நடிகை பானுப்பிரியா மீது வழக்கு

webteam

நடிகை பானுப்பிரியா வீட்டில் பணிபுரியும் சிறுமி சித்ரவதை செய்யப்படுவதாக சிறுமியின் பெற்றோர் ஆந்திர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாவதி என்பவர், சமல்கோட்டா பகுதி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது 14 வயது மகள், சென்னையில் பானுப்ரியாவின் வீட்டில் பணி புரிவதாக கூறியுள்ளார். அங்கு தனது மகளுக்கு பல கொடுமைகள் நடப்பதாக புகார் தெரிவித்துள்ளார். 

மகளை செல்போனில் தொடர்புகொள்வதற்கு கூட அனுமதிக்காமல் சித்ரவதை செய்வதாகவும் அவர் குற்றமசாட்டியுள்ளார். அத்துடன் பானுப்பிரியாவின் சகோதரர், தனது மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வருவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். தனது மகளை தன்னுடன் அனுப்ப பானுப்பிரியா மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ள அப்பெண், இதுதொடர்பாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக புதிய தலைமுறைக்கு பேட்டியளித்துள்ள பானுப்பிரியா, அச்சிறுமி தனது வீட்டில் பணிபுரியும் போது நகை, பணம், விலை உயர்ந்த பொருட்களை அந்த சிறுமி திருடி அவரது பெற்றோரிடம் அளித்து வந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இதைக் கண்டுபிடித்து பொருட்களை திரும்ப ஒப்படைக்க கூறியதாகவும், அதன் பேரில் வாட்ச், ஐ-போன் உள்ளிட்டவற்றை அவர்கள் திரும்ப அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நகை, பணத்தை வீட்டிற்கு சென்று எடுத்துவருவதாகக் கூறிய பெற்றோர், ஆந்திரா சென்றவுடன் தங்கள் மீது காவல்நிலையத்தில் பொய் புகார் கூறியுள்ளதாகவும் பானுப்ரியா குறிப்பிட்டுள்ளார்.