தனுஷ் - சிவகார்த்திகேயன் முகநூல்
சினிமா

பூதாகரமாக வெடித்த தனுஷ் - சிவகார்த்திகேயன் மோதல்?என்னதான் நடக்கிறது?

PT WEB

கொட்டுக்காளி டிரைலர் வெளியீட்டு விழாவில், தனக்கு வாழ்க்கை கொடுத்ததாகச் சொல்லி பழகிவிட்டனர் என்று சிவகார்த்திகேயன் பேசியது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் குறித்து தான் சிவகார்த்திகேயன் பேசினாரா? என சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து, நடிகராக மாறி இன்று முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயனை இயக்குநர் பாண்டிராஜ் 'மெரினா' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். இந்தப் படத்தில் ஒப்பந்தமாகும் முன்பே தனுஷ் உடன் '3' படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான 'மனம் கொத்தி பறவை', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து தனுஷ் தயாரித்த 'எதிர்நீச்சல்' படத்தில் நாயகனாக நடித்தார். இந்தப் படம் சிவகார்த்திகேயனின் சினிமா பயணத்தில் மறக்க முடியாத அளவிற்கு வெற்றியை பெற்று கொடுத்தது. எதிர்நீச்சல் வெற்றிக்கு பிறகு அளித்த சில நேர்காணலில், தனுஷ் தன்னை நம்பி படத்தை தயாரித்தது குறித்து பெருமையாக பேசி வந்தார். தொடர்ச்சியாக சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் வெற்றி பெற்று வந்தன.

அதே அளவுக்கு அவர் படங்கள் தொடர்பான சர்சைகள் எழுவதும் தொடர்கதையாகி இருந்தன. இதற்கிடையில் தனுஷ் உடன் ஏற்பட்ட கருத்து மோதலால் இருவரும் பேசிக் கொள்வதில்லை என்று தகவல்கள் வெளியாகின.

தனுஷ் கொடுத்த வாய்ப்புகளால் தான் சிவாகார்த்திகேயன் இத்தகைய வளர்ச்சி அடைந்துள்ளார் என்ற பேச்சுக்களும் கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது கொட்டுக்காளி என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், "பலர் எனக்கு வாழ்க்கை கொடுத்ததாகச் சொல்லி பழகிவிட்டனர். நான் அதுபோல் இல்லை. ” என்று தெரிவித்திருந்தார்.

இதனைக் கேட்ட ரசிகர்கள், தனுஷ் உதவியதை மறந்துவிட்டு நன்றி இல்லாமல் சிவகார்த்திகேயன் பேசிகிறார் எனக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முக்கியமாக, தனுஷ் தனக்கு வாய்ப்பு அளித்ததாக அவர் கூறும் வீடியோக்களையும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இத்தனை காலம் பேசப்படாமல் இருந்த விவகாரம், திடீரென பூதாகராமாய் வெடிக்க என்ன காரணம்? என பல கேள்விகள் எழுந்துள்ளன.