ஜானி எக்ஸ் தளம்
சினிமா

பாலியல் புகார் | பாய்ந்தது போக்ஸோ வழக்கு.... நடன இயக்குநர் ஜானி அதிரடி கைது!

Prakash J

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடன இயக்குநராக இருப்பவர் ஜானி. நடிகர் தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் “மேகம் கருக்காதா” என்ற பாடலுக்கு நடனம் இயக்கி, இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட தேசிய விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில், 21 வயதான பெண் உதவி நடன இயக்குநர் ஒருவர், ஜானி மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், “ஜானி மாஸ்டர் அவரது குழுவில் உதவி நடன இயக்குனராக சேரும்படி என்னை 2019-ல் கேட்டார். அதன்பேரில்தான் அவரின் நடனக்குழுவில் இணைந்தேன். பின் உதவி நடன இயக்குனராக பணியாற்றுவதற்காக சென்னை, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு படப்பிற்காக சென்றுள்ளேன். அச்சமயங்களில் ஓட்டலில் வைத்து என்னை ஜானி மாஸ்டர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார்” என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: நேற்று பேஜர்.. இன்று வாக்கி-டாக்கி.. லெபனானில் தொடரும் தாக்குதல்.. விசாரணையில் வெளிவந்த புது தகவல்!

மேலும் இந்தப் புகாரில், அதிர்ச்சி தரும் பல தகவல்கள் கூறப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதன்படி, சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பிய இப்பெண் அடையாளம் தெரியாத நபர்களால் மிரட்டப்பட்டதாகவும், ஆகஸ்ட் 28 ஆம் தேதி தனது வீட்டில் சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்று டெலிவரி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மட்டுமன்றி தன்னை வேறு இடங்களில் பணியாற்ற ஜானி மாஸ்டர் அனுமதிக்கவில்லை எனவும், மீறி தான் தனியாக எங்கும் வெளி நிறுவனங்களில் வேலை செய்ய சென்றுவிட்டால் அந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து, ‘உனக்கு எந்த சலுகையும் கிடைக்காமல் செய்து விடுவேன்’ என்று மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், ஆந்திர மாநிலம் ராயதுர்கம் காவல் துறையினர் சட்டப்பிரிவுகள் 376, 506, 323 ஆகிய பிரிவுகளின்கீழ் ஜானி மாஸ்டர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், நடன இயக்குநர் ஜானி, தலைமறைவானதாகத் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து ஜானி சார்ந்திருந்த ஜனசேனா (ஆந்திர துணை முதல்வர் பவண் கல்யாணின் கட்சி) கட்சியும், ஜானியை கட்சியிலிருந்து நிக்கியிருந்தது.

இதையும் படிக்க: 27 நாடுகளில் பரவிய புதிய வகை கொரோனா.. புதிய அலை உருவாக வாய்ப்பு.. அறிகுறிகள் என்ன?

பாதிக்கப்பட்ட பெண் கடந்த 5 ஆண்டுகளாக ஜானி தன்னை துன்புறுத்துவதாக கூறியிருந்ததால், அச்சமயத்தில் அப்பெண்ணின் வயது 16 என்றே இருக்குமென்பதை கருத்தில் கொண்டு ஜானி மீது போக்ஸோ வழக்கும் பதியப்படும் என சொல்லப்பட்டது. அதேபோல அவர்மீது போக்ஸோ வழக்கும் பதியப்பட்டது.

இந்த நிலையில், இன்று (செப்.19) பெங்களூருவில் தங்கியிருந்த நடன இயக்குநர் ஜானியை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.