சினிமா

மகள் நினைவாக, கீமோ சிகிச்சை பிரிவு கட்டிக்கொடுத்த ’சின்னக் குயில்’!

webteam

பிரபல பாடகி சின்னக்குயில் சித்ரா, மறைந்த தனது மகள் நினைவாக, கேரள கேன்சர் மருத்துவமனையில் கீமோ தெரபி பிரிவை கட்டிக்கொடுத்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகி சித்ரா. சின்னக் குயில் சித்ரா என்றழைக்கப்படும் இவர், தமிழில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். மலையாளம், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் 25,000 பாடல்களுக்கும் மேல் பாடி சாதனை படைத்துள்ளார். இவரது கணவர் விஜயசங்கர். இவர்களது ஒரே மகள் நந்தனா, 2011 ஆம் ஆண்டு துபாயில் நீச்சல்குளத்தில் மூழ்கி இறந்தார். 

மகளின் நினைவாக, பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார் சித்ரா. இவர் இப்போது கேரளாவின் பருமுலாவில் உள்ள புனித கிரிகோரியஸ் சர்வதேச கேன்சர் மையத்தில், கீமோ தெரபி சிகிச்சை பிரிவை இலவசமாகக் கட்டிக்கொடுத்துள்ளார்.

இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட சித்ரா, மகள் பற்றி பேசும்போது கண்கலங்கினார். பேசமுடியாமல் விம்மினார். பின்னர், பைத்தலம் ஏசுவே என்ற கிறிஸ்தவ பாடலைவிட்டு பேச்சை முடித்தார்.