சினிமா

நடிகர் விமல் மீது காவல்துறையினர் வழக்கு

webteam

கன்னட நடிகர் அபிஷேக்கை தாக்கியதாக நடிகர் விமல் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

கில்லி மற்றும் கிரீடம் போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்த நடிகர் விமல்,  பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். களவாணி மற்றும் வாகை சூடவா போன்ற படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் கவனம் பெற்றார். பின்னர் பெரிய அளவில் படங்கள் அவருக்கு வெளியாகவில்லை. இந்நிலையில் கன்னட நடிகர் அபிஷேக்கை தாக்கியதாக நடிகர் விமல் மற்றும் அவரது நண்பர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று இரவு நடிகர் விமல் தனது நண்பர்களுடன் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அதே விடுதியில் கன்னட நடிகர் அபிஷேக்கும் தங்கி இருந்ததாகவும், அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின் கைகலப்பானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தங்களை தாக்கியதாக நடிகர் அபிஷேக்கின் நண்பர்கள் சென்னை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் நடிகர் விமல் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மீது 294பி என்ற குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  விடுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே நடிகர் விமல் தரப்பு சார்பிலும் காவல்நிலையத்தில் அபிஷேக் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.