சினிமா

பில்டரை தாக்கியதாக வழக்கு: சந்தானம் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

webteam

பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில், கட்டட கான்ட்ராக்டரை தாக்கியதாக நடிகர் சந்தானம் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

3 பிரிவுகளின் கீழ் சந்தானம் மீது வழக்கு‌ பதியப்பட்டுள்ளது. அதேபோல சந்தானம் அளித்த புகாரின் பேரில் சம்‌பந்தப்பட்ட கான்ட்ராக்டர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது. பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இவ்விருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் நடிகர் சந்தானம் தாக்கிவிட்டதாக பில்டர் ஒருவர் சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வளசரவாக்கத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருடன் இணைந்து, குன்றத்தூர் அடுத்துள்ள மூன்றாம் கட்டளை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட சந்தானம் திட்டமிட்டதாக தெரிகிறது. அதற்காக, அவருடைய பங்கு பணத்தையும் சந்தானம் சண்முகசுந்தரத்திடம்‌ கொடுத்துள்ளார்.

கட்டடம் கட்டும் திட்டத்தை கைவிட்டதால், தான் கொடுத்த தொகையை சந்தானம் கேட்டுவந்ததாக கூறப்படுகிறது. ஒரு பகுதி பணத்தை கொடுத்துவிட்டு, மீத பணத்தை கொடுக்காமல் சண்முகசுந்தரம் அலைக்கழித்ததாக தெரிகிறது. இந்த நிலையில், சந்தானம் தனக்கு தரவேண்டிய பணத்தை கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கை கலப்பானதாக கூறப்படுகிறது. அதில், சண்முகசுந்தரமும் மற்றும் அவரது நண்பரும் காயமடைந்தனர். நடிகர் சந்தானத்திற்கும் காயம் ஏற்பட்டதாக தெரிகிற‌து.