சினிமா

’ஆர்டிகிள் 15’ படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் போனி கபூர்

webteam

’நேர்கொண்ட பார்வை’யை தொடர்ந்து மேலும் இரண்டு இந்தி படங்களை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார் போனி கபூர்.

இந்தியில் வெளியாகி, கவனம் பெற்ற ’பிங்க்’, தமிழில் அஜீத் நடிப்பில் ’நேர்கொண்ட பார்வை’ ஆகி இருக்கிறது. போனி கபூர் இதை தமிழில் தயாரித்துள்ளார். வினோத் இயக்கியுள்ள இந்தப் படம், வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து மேலும் இரண்டு இந்திப் படங்களை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார் போனிகபூர். இதற்காக அவர் இந்தியில் வெளியாகி ஹிட்டான ’ஆர்டிகிள் 15’, ’பதாய் ஹோ’ ஆகிய படங்களின் தென்னிந்திய ரீமேக் உரிமையை பெற்றிருக்கிறார்.

(பதாய் ஹோ)

’ஆர்டிகிள் 15’ படத்தில் ஆயுஷ்மன் குர்ரானா, இஷா தல்வார் உட்பட பலர் நடித்துள்ளனர். அனுபவ் சிங்கா இயக்கி இருந்த இந்தப்படம் சமீபத்தில் வெளியாகி, கவனம் பெற்றது. ’பதாய் ஹோ’ படம் கடந்த ஆண்டு வெளியானது. இதிலும் அயுஷ்மன் குர்ரானா நடித்திருந்தார். 

’ஆர்டிகிள் 15’ படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஏற்கனவே விருப்பம் தெரிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வருடத்துக்கு 2 படங்களை, தமிழில் தயாரிக்க போனி கபூர் முடிவு செய்துள்ளார் என்றும் தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் அவர் படம் தயாரிக்க இருப்பதாகவும் இதற்காக முன்னணி நடிகர்களிடம் அவர் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.