சினிமா

நடிகர் சுஷாந்தின் திடீர் மரணம்: பாலிவுட் திரைப்பிரபலங்கள் இரங்கல் !

jagadeesh

தோனியின் சுயசரிதை படத்தில் நடித்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று மும்பையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது இந்தியத் திரையுலகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் சுஷாந்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் "நடிகர் சுஷாந்த் சிங் இறந்த செய்தி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது;அவர் ஒரு திறமையான நடிகர்;அவர் நடித்த சிச்சோர் படத்தைப் பார்த்துவிட்டு அப்படத்தின் தயாரிப்பாளரும் எனது நண்பருமான சஜித்திடம் நான் அந்தப் படத்தை எந்த அளவிற்கு ரசித்தேன் என்பதைக் கூறினேன்" எனப் பதிவிட்டு இருக்கிறார்.

எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமான சேத்தன் பகத் "சுஷாந்த் நீ என்னுடைய நண்பனாகவும், இன்ஸ்பிரேஷனாகவும் இருந்திருக்கிறாய். எனக்கு மிகவும் பிடித்தமானவன் நீ. உன்னை முன்னுதாரணமாகப் பலரிடம் சொல்லி இருக்கிறேன். என்னால் இப்போதும் நம்ப முடியவில்லை. இது நடந்திருக்கக் கூடாது. எப்போதும் உன்னை நேசிக்கிறேன், ஆன்மா சாந்தியடையட்டும்" என உருக்கமாகப் பதிவிட்டு இருக்கிறார்.

நடிகர் சோனு சூட் "மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது... என்னிடம் வார்த்தைகள் இல்லை... இது உண்மையாக இருக்கக் கூடாது" எனப் பதிவிட்டிருக்கிறார். சுஷாந்துடன் தோனி திரைப்படத்தில் உடன் நடித்த நடிகை திஷா படானி தனது ட்விட்டர் பக்கத்தில் உடைந்த இதயம் எமோஜியை பயன்படுத்தி இரங்கலைப் பதிவு செய்திருக்கிறார். இவர்களைத் தவிர தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், நடிகைகள், இயக்குநர்கள் எனப் பலரும் சுஷாந்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.