சினிமா

ஆஜராகாவிட்டால், ஜாமின் ரத்து: சல்மான் கானுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

webteam

மான் வேட்டை வழக்கில், சல்மான் கான் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமின் ரத்து செய்யப்படும் என்று ஜோத்பூர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

பிரபல இந்தி நட்சத்திரங்களான சல்மான் கான், சைஃப் அலிகான், நடிகை தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் 1998 ஆம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த ‘ஹம் சாத் சாத் ஹே’ என்ற இந்தி பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டனர். அப்போது, அங்குள்ள காட்டில் வேட்டைக் குச் சென்றதாகவும், இதில் அரிய வகை மான்களை, நடிகர் சல்மான்கான் வேட்டையாடியதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அவர் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கில் கடந்த ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கில் இருந்து சைஃப் அலிகான், தபு, சோனாலி உட்பட 5 பேரை விடுவித்த நீதிமன்றம், சல்மான் கான் குற்றவாளி என்று அறிவித்து 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. அன்றே சிறையில் அடைக்கப்பட்ட அவர், பின்னர் ஜாமினில் வெளியே வந்தார்.

இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து, ஜோத்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார் சல்மான் கான். அந்த வழக்கில் இன்று ஆஜராகும்படி நீதிமன்றம், சல்மான் கானுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஆஜரா கவில்லை. ’’இந்த வழக்கின் அடுத்த விசாரணையின் போது சல்மான் கான் கண்டிப்பாக ஆஜராகவேண்டும். இல்லை என்றால், அவரது ஜாமின் ரத்து செய்யப்படும்’’ என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது

பின்னர் இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.