சினிமா

என்.எல்.சியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்புக்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

rajakannan

நெய்வேலியில் நடைபெற்று வரும் மாஸ்டர் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சியில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, பிகில் பட வருவாய் ஏய்ப்பு புகார் தொடர்பாக நேற்று முன் தினம் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை, வருமான வரித்துறையினர் சென்னை அழைத்து வந்து 23 மணி நேரத்திற்கும் மேலாக விசாரித்தனர். வருமான வரித்துறை சோதனை முடிவடைந்த நிலையில், மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய் மீண்டும் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், கடலூரில் விஜய்யின் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என்.எல்.சி 2வது சுரங்கம் முன் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். என்.எல்.சி சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்தது தவறு எனக்கூறி பாஜகவினர் போராட்டம் நடத்தினர். மாஸ்டர் படப்பிடிப்புக்கு பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் 10ஆம் தேதிவரை முறையாக அனுமதி தரப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

‘படப்பிடிப்பு நடத்துவதற்கு எதிராக என்.எல்.சி அதிகாரிகளிடம் முறையிட்டோம்; நடவடிக்கை எடுக்கவில்லை. பாதுகாக்கப்பட்ட இடத்தில் எப்படி அனுமதி வழங்கலாம். சுரங்கம் அமைந்துள்ள பகுதியில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை’ என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.