சினிமா

என் நெஞ்சுக் கூட்டுக்குள் நெருப்பு பற்றிக் கொண்டது: காட்டுத்தீ பற்றி பாரதிராஜா கதறல்

webteam

குரங்கணி மலையில் நடந்த தீ விபத்து குறித்து இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தேனி மாவட்டம்தான் இயக்குநர் பாரதிராஜாவிற்கு சொந்த பூமி. அங்கே நடைபெற்றுள்ள காட்டுத் தீ சம்பவம் அவரை கலங்கடிக்கச் செய்துள்ளது. இந்தக் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். காயம்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பாரதிராஜா, ''தேனி மாவட்டம் குரங்கணியில் ஏற்பட்ட தீவிபத்து பற்றிக் கேள்விப்பட்டபோது, என் நெஞ்சுக் கூட்டுக்குள் நெருப்பு பற்றிக் கொண்டதாய் நினைக்கிறேன். தேனி மாவட்டம், அன்பிற்கும் ஈரத்திற்கும் மட்டுமே பெயர் பெற்றது. ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட தீவிபத்து, எங்கள் மாவட்டத்திற்கே ஆறாத காயத்தை ஏற்படுத்திவிட்டது.” என்று கூறியுள்ளார்.

மேலும் “கள்ளிச் செடிகளுக்கு காயம் பட்டாலே கலங்கிப் போவேன். இத்தனை மனிதத் தளிர்கள் தீய்க்கு இரையானதையும், பெருங்காயம் பட்டுப் பெருந்துயர் கொண்டதையும் நினைத்துக் கலக்கமடைகிறேன். இந்த வெப்ப நேரத்தில் எப்படி தீப்பற்றியது என்பது திகைப்புதான். மூங்கிலோடு மூங்கில் உரசினாலே தீப்பற்றிக் கொள்ளும் என்பது உண்மை. இருந்தாலும், சமூக விரோதிகள் யாரேனும் இந்த சட்ட விரோத செயலில் ஈடுபட்டிருந்தால், அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பிள்ளைகளை இழந்து வாடும் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவர்கள் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்” என கூறியுள்ளார்.