சினிமா

நடிகை பூர்ணாவை திருமணம் செய்து கொள்ளவேண்டி மிரட்டல் விடுத்த நபர் கைது

webteam
பிரபல நடிகையைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதோடு, பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
தமிழ் சினிமாவில் "முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் ஷாம்னா காசிம் என்ற பூர்ணா. இவர், கந்தக்கோட்டை, ஆடு புலி, வித்தகன், கொடி வீரன், காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமானார். இவர் தனது தாயார் ரவுலாவுடன் கொச்சியில் வசித்து வருகிறார். 
 
 
இந்நிலையில், நடிகை பூர்ணாவை ஆறு பேர் கொண்ட கும்பல் மிரட்டுவதாக அவரது தாயார் கொச்சி மாராடு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில், பூர்ணாவுக்கு திருமண வரன் பார்ப்பதற்காக அறிமுகமான ரஃபிக் என்பவர், தங்களை மிரட்டுவதாகத் தாயார் ரவுலா கூறியுள்ளார். ரஃபிக்கை திருமணம் செய்து கொள்ள நடிகை பூர்ணாவை வற்புறுத்துவதாகத் தாயார் ரவுலா புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 
 
 
மேலும், ரஃபிக் உள்பட ஐந்து பேர் கொண்ட கும்பல் பூர்ணாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், நடிகையோடு புகைப்படம் எடுக்க ரஃபிக் முற்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்ணாவிடம் இருந்து பத்து லட்சம் ரூபாய் கேட்கும் ரஃபிக், அந்தப் பணத்தைத் தராவிட்டால் நடிகையின் சினிமா வாழ்க்கையை அழித்து விடுவேன் எனவும் மிரட்டுவதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
நடிகை பூர்ணாவுக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில், திருச்சூரைச் சேர்ந்த ரபீக், சரத், அஷ்ரப், ரமேஷ் ஆகிய நான்கு பேரைக் கைது செய்த கொச்சி மாராடு காவல்துறை, மேலும் இரண்டு‌ பேரைத் தேடி வருகிறது.