சினிமா

ஐந்து முறை தேசிய விருது... கலை இயக்குநர் பி.கிருஷ்ண மூர்த்தி மறைவுக்கு கோலிவுட் புகழஞ்சலி!

sharpana

பிரபல கலை இயக்குநர் பி.கிருஷ்ண மூர்த்தி உடல்நலக் குறைவால் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 77. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் கலை இயக்குநராகவும், ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி சிறந்த கலை இயக்குநருக்காக மூன்று முறை, சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்காக இரண்டு முறை என மொத்த ஐந்து முறை தேசிய விருது வென்ற பிரபல கலை இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ண மூர்த்தி கலை இயக்குநராக பணியாற்றிய அத்தனைப் படங்களுமே கவனிக்க வைத்தவை. கலை இயக்கத்திற்காக பாராட்டுக்களைக் குவித்தவை. சூப்பர் ஹிட் படமான 'நாடோடி தென்றல்', 'வண்ண வண்ண பூக்கள்', 'ஜுலி கணபதி', 'தாஜ்மஹால்', 'தெனாலி', 'வானவில்', 'பாண்டவர் பூமி', 'சங்கமம்', 'அழகி', 'இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி', 'ஜெகன் மோகினி', 'நான் கடவுள்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் பணியாற்றியுள்ளார். கேரளாவின் ஐந்து திரைப்பட விருதுகள் மற்றும் தமிழக அரசின் நான்கு திரைப்பட விருதுகளும் இவருக்கு கிடைத்துள்ளது.

சென்னை மடிப்பாகத்தில் வசித்து வந்தவர் திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தது திரைத்துறையினரை அதிர்ச்சிகுள்ளாக்கியிருக்கிறது. அவருக்கு தமிழ்த் திரையுலகம் புகழஞ்சலி செலுத்தி வருகிறது.

இறுதிச்சடங்கு இன்று மதியம் மடிப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடக்கிறது. இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், என் கலைதுறையில் என் கண்களில் என் இன்னொரு உணர்வை இழந்திருக்கிறேன். கிருஷ்ணமூர்த்தியின் மறைவு நம்ப முடியா ஒன்று... வாடிதவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று உருக்கமுடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.