சினிமா

‘வடசென்னை’யில் அந்தக் காட்சியில் நடித்தது தவறான முடிவு - ஆண்ட்ரியா

webteam

‘வடசென்னை’ படத்தில் வழங்கப்பட்ட வேடத்தில் தான் நடித்தது என்பது தவறான முடிவு என்று நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளார்.

ஆண்ட்ரியா நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘வடசென்னை’. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படத்தில் தனுஷ் நடித்திருந்தார். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு சில கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. இதில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்திருந்தார். இவரது நடிப்பு பலரையும் கவனிக்க வைத்தது. ஆகவே ஆண்ட்ரியாவிற்கு நல்லவிதமான விமர்சனங்கள் கிடைத்தன.

ஆண்ட்ரியாவின் ரொமான்ஸ் காட்சிகளில் அவர் கொஞ்சம் அதிக நெருக்கத்துடன் நடித்திருப்பதாகவும் சிலர் கூறியிருந்தனர். அந்தக் காட்சிகளில் அவ்வாறு நடித்திருந்ததை நினைக்கும்போது, தனக்கு இப்போது அவ்வாறு நடித்திருக்கக் கூடாது என தோன்றுவதாக கூறியுள்ளார். ஆண்ட்ரியா இப்போது அளித்துள்ள ஒரு பேட்டியில் அந்தக் காட்சிகளால் தன் எதிர்காலம் பாதித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

‘வடசென்னை’ படத்தில் நெருக்கமான சில காட்சிகளில் நடித்த பிறகு, அதேபோல ஒத்த கதாபாத்திரங்களில் நடிக்க பல வாய்ப்புகள் வந்ததாகவும் அவை அனைத்தும் ஒன்றுபோலவே இருந்ததாகவும் கூறியுள்ளார். அப்போதுதான் தவறான முடிவை எடுத்து நடித்துவிட்டோம் என்பதை உணர்ந்தேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ’வடசென்னை’ என்பது தான் எடுத்த தவறான முடிவு என்றும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஆகவே தனது சம்பளத்தை தற்போது குறைத்துக் கொண்டு நடிக்க முன்வந்திருப்பதாகவும் ஆனால் தனக்கு நல்ல வேடங்கள் கிடைத்தால் மட்டுமே அதை செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொதுவாக எந்த நடிகையும் இவ்வளவு வெளிப்படையாக தனது முந்தைய கதாபாத்திரங்கள் பற்றிய கருத்தை முன்வைக்க மாட்டார்கள். ஆனால் ஆண்ட்ரியா சற்றும் தயங்காமல் தைரியமாக பேசி இருக்கிறார் என்று அவரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.