சினிமா

என்னிடம் அடி வாங்க தயாராக இருங்கள்: ஸ்ரீரெட்டியின் அடுத்த அட்டாக்!

webteam

பட வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை தெலுங்கு திரையுலகினர் பயன்படுத்திக்கொண்டனர் என்று கூறு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீ ரெட்டி.

அடுத்து தமிழ் சினிமா பிரபலங்கள் மீது பரபரப்பு புகார் கூறி வருகிறார். அண்மையில் வெளியிட்டிருந்த ஃபேஸ்புக் பதிவு ஒன்றில், ’முருதாஸ் ஜி எப்படி இருக்கீங்க?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் கிரீன்பார்க் ஓட்டல் ஞாபகம் இருக்கறதா? என்றும் முருகதாசிடம் அவர் கேட்டிருந்தார். அத்துடன் வெளிகொண்டா சீனிவாஸ் மூலம் உங்களுக்கு அறிமுகமான என்னுடன் பலமுறை இருந்தாலும் கூறியபடி வாய்ப்பு வழங்கவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த், நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஐதராபாத் வந்த போது தன்னை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு வைத்திருந்தார். இதனால் தமிழ்த் திரையுலகில் சர்ச்சை உண்டானது. இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சி மீது ஸ்ரீ ரெட்டி பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், ’ஐதராபாத்தில் ‘அரண்மனை’ படப்பிடிப்பு நடந்தபோது, படத்தின் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளரான கணேஷ் என்பவர் எனக்கு போன் செய்தார். யார் மூலமாக என் நம்பரை பெற்றீர்கள்? என்றதற்கு, தெரிந்தவர் ஒருவர் மூலம்’ என்றார். பின்னர் நான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றபோது அங்கு என்னை சுந்தர் சி.யிடம் அறிமுகம் செய்தார். அப்போது எனது ஃபேஸ்புக் நண்பரான கேமராமேன் செந்தில்குமாரையும் சந்தித்தேன். அடுத்த படத்தில் நீங்களும் ஒரு ஹீரோயின் என்று எனக்கு அவர் உறுதியளித்தார். 

மறுநாள் போன் செய்து தனியார் ஓட்டலுக்கு அழைத்தார். அதன் பின்னர் சுந்தர்.சி பாலியல் தொடர்பு வைத்துக்கொள்ளச் சொன்னார். அதன் பின் னர் நடந்தது கடவுளுக்கு தெரியும். ஆனால் மோசடி மனிதர் கணேஷ் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை’ என்று குற்றம்சாட்டியுள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் மீதும் இதேபோன்ற குற்றச்சாட்டைக் கூறியிருந்தார். 

இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆதாரம் இல்லாமல் யார் மீதும் குற்றம் சொல்ல கூடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அவரை கண்டித்தது. தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் போலீஸ் விசாரணை நடத்தினால் அவற்றை வெளியிடுவேன் என்றும் அவர் கூறினார். 

இந்நிலையில் ’சிவா மனசுல புஷ்பா’ பட இயக்குனர் வாராகி என்பவர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஸ்ரீரெட்டி மீது புகார் அளித்தார். நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் சொல்லி மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஸ்ரீரெட்டி ஈடுபடுவதாகவும் விபச்சாரம் மற்றும் மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். 
அவர் மேலும் கூறும்போது, ’ஸ்ரீரெட்டி ஒன்றும் குழந்தை இல்லை. அவர் அனைத்திலும் உடன்பட்டு தான் சென்றிருக்கிறார். படவாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் ஒருமுறை ஏமாறி போயிருக்கலாம். பலமுறை ஏமாறினால் அதுக்கு பெயர் என்ன? அது விபசாரம் என்று தான் சொல்கிறேன்’ என்று கூறினார்.  

இந்த நிலையில் தனது பேஸ்புக் பக்கத்தில் ஸ்ரீரெட்டி, ’அவதூறாக பேசிய வாராகி என்னிடம் அறை வாங்க தயாராக இருங்கள். அதற்கு தகுதி யானவர்தான் நீங்கள். பாதிக்கப்பட்ட பெண்ணான எனக்கு மரியாதை அளிப்பதற்கு பதிலாக, என்னை வைத்து மலிவான விளம்பரம் தேட வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.