ராஷ்மிகா மந்தனா முகநூல்
சினிமா

சைபர் கிரைம் தடுப்பு: ராஷ்மிகா மந்தனாவிற்கு கிடைத்த பதவி; உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு!

ஜெனிட்டா ரோஸ்லின்

சமீபத்தில், டீப் பேக் (Deep fake) வீடியோவால் பாதிக்கப்பட்ட நடிகை ராஷ்மிகா மந்தனாவை, இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மைய தேசிய தூதராக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என அனைத்து திரைத்துறைகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சுல்தான், வாரிசு திரைப்படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் பரிட்சையமானவர். புஷ்பா, அனிமல் திரைப்படத்தில் தனக்கென கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்து இந்திய அளவில் தனது அடையாளத்தை பதித்தார். தொடர்ந்து அமிதாப்பச்சனுடன் Goodbye என்ற படத்தில் நடித்து, இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக மாறினார்.

இந்த நிலையில்தான், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராஷ்மிகா இடம்பெற்ற டீப் ஃபேக் வீடியோவொன்று வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியது. ஆனால், அதை துணிச்சலாக கையாண்டார் ராஷ்மிகா. இந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும், உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கம் வேண்டும் என்றும், சைபர் கிரைம் போலீசாரிடம் வழக்குப்பதிவு செய்தார்.

இதனையடுத்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், வேறொரு பெண் இருந்த வீடியோவில் ராஷ்மிகாவின் முகம் மாற்றப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அதுதொடர்பாக இணையத்தில் இருந்த அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டது. இருப்பினும் அடுத்தடுத்த நிகழ்வுகளாக நடிகைகள் கேத்ரினா கைப், கஜோல் உள்ளிட்டோரின் போலியான டீப் ஃபேக் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியது. இதனால் டீப் ஃபேக் வீடியோக்களை கட்டுப்படுத்துவதற்கான தேவை அதிகரித்தது.

இந்த நிலையில்தான், நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு , இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு குழுவின் பிராண்ட் அம்பாசிடராக பதவியை வழங்கி உள்துறை அமைச்சகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ள ராஷ்மிகா மந்தனா, “டிஜிட்டல் உலகத்தில் வாழும் நாம் பல நேரங்களில் சைபர் குற்றங்களால் பாதிப்பிற்கு உள்ளாகுகிறோம். சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் என்ற முறையில், ஆன்லைன் உலகத்தைப் பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் நேரம் வந்துவிட்டது என நம்புகிறேன்.

நமக்காகவும் எதிர்கால சந்ததியினருக்காகவும் பாதுகாப்பான சூழலை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஐ4சி (I4C - Indian Cyber Crime Coordination Centre)க்கான பிராண்ட் அம்பாசிடராக நான் பொறுப்பேற்றுள்ளேன். இதன்பிறகு, ​​இணையக் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகளவு ஏற்படுத்த உள்ளேன். மேலும், அந்தக் குற்றங்களில் இருந்து உங்களை முடிந்த அளவு பாதுகாக்கவும் விரும்புகிறேன்.

சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் 1930 என்ற எண்ணிற்கு சைபர் குற்றங்கள் குறித்து புகாரளிக்கலாம். அல்லது அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார்களை பதிவு செய்யலாம். உங்கள் புகார் தொடர்பாக அரசாங்கத்துடன் இணைந்து நானும் உதவ உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் என்ற முறையில், ராஷ்மிகாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.