Ganges of Godhavari பட விழாவில் பாலையா - அஞ்சலி ட்விட்டர்
சினிமா

மேடையில் தள்ளிவிட்டாரா பாலைய்யா? வீடியோ வைரலான நிலையில், ட்வீட் மூலம் நடிகை அஞ்சலி பதில்!

ஜெனிட்டா ரோஸ்லின்

வெள்ளித்திரையில், நொடி நேரத்தில் நூறு பேரை அடித்து வீழ்த்தி, கரவொலிகளோடு கலெக்ஷனை அள்ளும் டோலிவுட் சூப்பர் ஸ்டார் நந்தமூரி பாலகிருஷ்ணா (எ) பாலைய்யா சமீபத்தில் விஸ்வக் சென் நடிப்பில், கிருஷ்ண சைதன்யா இயக்கியுள்ள 'கேங்ஸ் ஆஃப் கோதாவரி' திரைப்படத்தின் அறிமுக விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார். இதில், அவர் நடந்து கொண்ட விதம், அவர் மீதான விவாதத்தை மீண்டும் ஒருமுறை தொடங்கி வைத்துள்ளது.

அதன்படி மேடையில் படக்குழுவினருடன் தோன்றியபோது, நாயகிகளான அஞ்சலி, நேஹா ஷெட்டி ஆகியோரை நகர்ந்து நிற்குமாறு கூறினார் பாலைய்யா. அப்போது, அஞ்சலி மெதுவாக நகர்ந்து நிற்கவே, கடுப்பான பாலகிருஷ்ணா சட்டென அஞ்சலியை பிடித்து தள்ளி விட்டதுபோல் இருந்தது. இதை எதிர்பார்க்கவில்லை என்றாலும் சிரித்து சமாளித்தார் அஞ்சலி.

பாலைய்யாவின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் கண்டங்களும், விமர்சனங்களும் தற்போது எழுந்துவரும் நிலையில், பாலைய்யாவால் தள்ளிவிடப்பட்ட அஞ்சலி தனது சமூக வலைதளப்பக்கத்தில் காணொளி ஒன்றுடன் சேர்த்து பாலைய்யா குறித்த பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த பாலகிருஷ்ணா அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாலகிருஷ்ணா அவர்களும் நானும் ஒருவரையொருவர் எப்போதும் பரஸ்பர மரியாதையுடன் நடத்திவருகிறோம் என்பதையும், நீண்ட கால நட்பை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிலையில், மீண்டும் அவருடன் மேடையை பகிர்ந்து கொண்டதை அருமையான விஷயமாக பார்க்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம், ‘எங்கள் இருவருக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை. எங்கள் நீண்ட கால நட்பின் வெளிப்பாடுதான் இது’ அஞ்சலி கூறியுள்ளதாக தெரிகிறது. இப்பதிவின் வழியாக வைரலாகிவரும் சர்ச்சை வீடியோவுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அஞ்சலி.

பொது இடங்களில் பாலய்யாவின் அநாகரீக செயல் என்பது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே

- 2021 ஆம் ஆண்டு, தன்னிடம் செல்பி எடுக்க முயன்ற ரசிகரை ஆக்ரோஷமாக திட்டி, அடித்து, செல்போனை தூக்கி வீசி சர்ச்சையில் சிக்கினார்

- விபத்து குறித்தான கலந்துரையாடல் ஒன்றில், மருத்துவமனையில் தன்னை கவனித்து கொண்ட செவிலியரின் அழகை வர்ணித்து விமர்சனத்தை அள்ளிக்கொண்டார்

- வீரசிம்ம ரெட்டி திரைப்படத்தின் வெற்றி விழாவில், தெலுங்கு திரையுலகின் மூத்த தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவை தரக்குறைவாக பேசியதால், நடிகர் நாகார்ஜூனின் குடும்பத்தினரின் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி சர்ச்சையில் சிக்கினார்.

இப்படி இவர் செய்ததை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இப்பொழுது, இந்தவரிசையில் அஞ்சலியை தள்ளிவிட்டதும் இணைந்துவிட்டது. தற்போதும்கூட இந்த ‘Ganges of Godavari' விழாவில் பாலகிருஷ்ணா மது அருந்தினார் என்பது போன்ற சில வீடியோக்கள் வைரலாகிவருகின்றன.

இருப்பினும் அதன் உண்மைத்தன்மை அறியப்படவில்லை. சிலர் அது எடிட் செய்யப்பட்டது என்றும், சிலர் அது உண்மை என்றும் கூறிவருகின்றனர். ‘அஞ்சலியை பாலைய்யா தள்ளியது மதுபோதையில்’ என்றும் சிலர் கூறிவருகின்றனர். இதுவும் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.