மெய்யழகன் திரைப்படம் முகநூல்
சினிமா

“படத்தை படமா பாருங்க... Review பண்ணுவதில் நிறைய ஆர்வம் காட்ட வேண்டாம்” - நடிகர் சூர்யா வேண்டுகோள்!

“படத்தை view பண்ணுவோம்; review பண்ணுவதில் நிறைய ஆர்வம் காட்ட வேண்டாம்” - என மெய்யழகன் திரைப்படத்தை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

கார்த்தி மற்றும் அரவிந்த சாமி நடிப்பில், ஜோதிகா - சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெளியாகவுள்ள திரைப்படமான ‘மெய்யழகன்’ திரைப்படத்தை 96 திரைப்பட இயக்குநர் பிரேம் இயக்கியுள்ளார்.

இத்திரைப்படம் வருகின்ற 27 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இன்றைய தினம் ட்ரைலரும் வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது.

96 திரைபடத்தைப்போல் ஓர் இரவில் நடக்கும் கதையாக கதைக்களம் அமைந்துள்ளது. இந்தவகையில், திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

அதில் பங்கேற்ற நடிகர் சூர்யா பேசுகையில், "மெய்யழகன் திரைப்படத்தில் ஜோதிகா - சூர்யா என்று தயாரிப்பாளராக எங்களின் பெயரை போட வாய்ப்பளித்ததற்கு பிரேம் அவர்களுக்கு நன்றி.

மெய்யழகன்

ஒருவரை பார்த்தவுடன், ‘இவரிடம் படிப்பு, அடையாளம், பழக்கவழக்கம் என அனைத்தும் நன்றாக இருக்கிறது’ என்று மற்றவர்கள் பாராட்டுகின்றனர் என்றால், அதற்கு சம்பந்தப்பட்ட நபரின் பள்ளிக்கூடமும், கல்லூரியும், குடும்பங்களும் மட்டுமே காரணமாக இருப்பதில்லை; அவரை சுற்றி உள்ள நிறைய உறவுகளும் அதில் அடங்குவர்.

அப்படி நாங்கள் (தானும் கார்த்தியும்) வளர்ந்தபோது எங்களை நன்றாக பார்த்துக் கொண்ட ஒவ்வொருவருக்கும் எவ்வளவு நன்றியை கூறினாலும் அது அவர்களுக்கு ஈடாகாது. மிகவும் பரிசுத்தமான ஆத்மாக்களாக அந்த உறவுகளை நான் பார்க்கிறேன். இவையும் ரசிகர்களாகிய உங்களுக்கும் பொருந்தும். உங்களையும் அங்கே வைத்துதான் நான் பார்க்கிறேன்.. அன்னார்ந்து பார்க்கிறேன்.

இதுபோன்ற ஒரு உறவை சொல்வதுதான் மெய்யழகன் திரைப்படம். நேற்று இரவு இந்த திரைப்படத்தை நான் பார்த்தபோது, சந்தோஷமும் அழுகையும் கலந்த ஒரு உணர்வு எனக்கு இருந்தது. பருத்தி வீரன் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக இந்ததிரைப்படத்தை பார்த்து கார்த்தியை நான் கட்டியணைத்தேன். இப்படத்தில் நடித்ததற்காக அரவிந்த் சாருக்கு எனது நன்றி.

சூர்யா கார்த்தி

நடிப்பைத் தாண்டி இருவரும் (அரவிந்த சாமி மற்றும் கார்த்தி) பேசிக்கொண்ட உறவு எனக்கு பொறாமையாக இருந்தது.

1992 ல் நான் ரோஜா திரைப்படத்தை நான் தியேட்டரில் பார்க்க சென்ற போது, அவர் (அரவிந்த்சாமி) தேவி தியேட்டரில் கண்ணாடியின் அருகில் உட்கார்ந்து படம் பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது நான் அவரை தூரத்திலிருந்து பார்த்தேன். அப்போது அவரிடத்தில் நான் பேசவில்லை. அந்த சமயம் அவர் ஒரு மெரூன் டீ சர்ட் போட்டிருந்தார். அதே டீ சர்ட்டை போல நானும் வாங்கி போட்டிக்கொண்டேன்.

இப்போதுவரை மெரூன் சட்டை பார்க்கும்போதெல்லாம், இவரது நினைவு எனக்கு வந்துசெல்லும். அந்த அளவிற்கு எனக்கு அவரை பிடிக்கும்.

மெய்யழகன் திரைப்படத்தில் ஜோ நடித்திருக்கிறார். தயாரிப்பாளராக நாங்கள் எவ்வளவு சந்தோஷமடைந்திருக்கிறோம் என்று எனக்கு கூற வார்த்தைகளே இல்லை.

96 திரைப்படத்தில் ஒரே இரவில் நடக்கும் விஷயங்களை அழகாக பிரேம் எழுதியிருப்பார். அதேபோலதான், இந்த திரைப்படமும். ஒரே இரவில் எவ்வளவு பேசமுடியும் என்பதை ஒரே ஒருத்தரால்தான் எழுத முடியும் என்று நான் நினைக்கிறேன். அது பிரேம்தான். 96 திரைப்படத்தின் மீது எனக்கு அவ்வளவு மரியாதை இருக்கிறது. அதே போல விஜய் சேதுபதி அவர்களுக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

வருகின்ற 27 ஆம் தேதி மெய்யழகன் திரைப்படம் வெளியாகவுள்ளது. ரசிகர்களிடம் ஒரு கோரிக்கை... படத்தை படமாக மட்டும் பாருங்கள். வணிக ரீதியாக படம் எவ்வளவு வசூலித்தது என்ற பிரச்னை உங்களுக்கு வேண்டாம். தயவு செய்து வேண்டாம். படத்தை view பண்ணுவோம். review பண்ணுவதில் நிறைய ஆர்வம் காட்ட வேண்டாம். இதுமாதிரியான படங்கள் அபூர்வமாகத்தான் நமக்கு கிடைக்கும்” என்றார்.