சினிமா

நடிகர் சண்முகசுந்தரம் காலமானார்

webteam

நடிகர் சண்முகசுந்தரம் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80.

சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த அவருக்கு இன்று அதிகாலையில் சளி பிரச்னை காரணமாக, மூச்சடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். 
இதையடுத்து அவரது உடல், மயிலாப்பூர், பாபா கோயில் அருகேயுள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் இறுதிச் சடங்கு நடக்கிறது. மறைந்த சண்முக சுந்தரத்துக்கு மனைவி சுந்தரி, மகன் பாலாஜி, மகள்கள் கீதா, பவித்ரா ஆகியோர் உள்ளனர்.

தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திரம், வில்லன், காமெடி கேரக்டர்களில் நடித்தவர் சண்முகசுந்தரம். நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், கண்ணதாசனுடன் ஹிட்லர்’ என்ற நாடகத்தில் நடித்து பிரபலமானார். இவர் நடிப்பைப் பார்த்து வியந்த நடிகர் சிவாஜிகணேசன், அவரின் ’ரத்தத் திலகம்’ (1963) திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கினார். இதில் அவர் சீன ராணுவ மேஜராக நடித்திருந்தார். இந்தப் படத்தில் திரையுலக வாழ்க்கையை தொடங்கிய சண்முகசுந்தரம் தொடர்ந்து, கர்ணன், வாழையடி வாழை, தசாவதாரம் உட்பட ஏராளமான படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தார். 

கங்கை அமரனின் ’கரகாட்டக்காரன்’இவருக்கு ரீ என்ட்ரி கொடுத்தது. ஏராளமான படங்களில் நடித்தார். பின்னர் வெங்கட்பிரபு, ’சென்னை 28’, ’சரோஜா’,  ’கோவா’  படங்களில் நடிக்க வைத்தார். மேலும், ’தமிழ்ப்படம்’, ’கலகலப்பு’, ’கடவுள் இருக்கான் குமாரு’ சமீபத்தில் வெளியான ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ வரை சுமார் 250 படங்களில் நடித்துள்ளார். ராதிகாவின், அண்ணாமலை, அரசி, செல்வி உட்பட டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகை சந்திரகாந்தா, இவரது தங்கை.

நடிகர் சண்முகசுந்தரம் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.