rajnikanth - mari selvaraj web
சினிமா

’நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது.. நீங்கஒரு தலைசிறந்த இயக்குநர்’! - மாரி செல்வராஜை புகழ்ந்த ரஜினி

Rishan Vengai

அழுத்தமான கதைக்களத்தை எடுத்து படமாக்குவது மட்டுமில்லாமல், அதை ரசிகர்களுக்கும் எளிமையான முறையில் எடுத்துச்சென்று நெருக்கமான சினிமாவாக காட்டுவதில் மேலும்மேலும் தேர்ச்சி பெற்றவராக மாறிவருகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், வாழை திரைப்படத்தின் மூலம் மீண்டுமொரு அழுத்தமான கதைக்களத்தை படமாக்கி திரையரங்கை விட்டு எல்லோருடைய மனதையும் கலங்கடித்துவிட்டுதான் வெளியே அனுப்பிவைத்தார்.

Vaazhai Movie

வாழை திரைப்படத்தை புகழ்ந்தும், பாராட்டியும் பேசாத இயக்குநர்கள், நடிகர்களே இல்லை என்றாலும், தற்போது வாழை திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் “மாரி செல்வராஜ் ஒரு தலைசிறந்த இயக்குநர் என்பதை நிரூபித்துவிட்டார் என்றும், தமிழ்சினிமாவில் நல்ல திரைப்படம் வெகுநாட்களுக்கு பிறகு வந்துள்ளது என்றும்’ மனம்திறந்து பாராட்டியுள்ளார்.

நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது..

வாழை திரைப்படத்தை பார்த்துவிட்டு தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், மாரி செல்வராஜை ஒரு தலைசிறந்த இயக்குநர் என்று பாராட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “மாரி செல்வராஜ் அவர்களுடைய வாழை படம் பார்த்தேன். ஒரு அற்பதமான, தரமான படம் தமிழில் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கு.

மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்திற்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார். அதில் அந்த பையன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்ட்டங்கள் எல்லாம் பார்க்கும்போது அதை நாமே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. கிளைமாக்ஸில் அந்த பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையனுக்கு ஒரு கைசோறு சாப்பிடவிடவில்லையே என்று கதறும்போது, நமது நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது.

மாரி செல்வராஜ் தான் ஒரு தலைசிறந்த இயக்குநர் என்பதை இந்த படத்தின் முலம் நிரூபித்திருக்கிறார். மாரி செல்வராஜ் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.” என்று பதிவிட்டுள்ளார்

ரஜினிக்கு நன்றி தெரிவித்த மாரி செல்வராஜ்..

நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இயக்குநர் மாரி செல்வராஜ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் நன்றியை தெரிவித்துள்ளார்.

அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், “அன்று பழைய தகரபெட்டிக்குள் உங்கள் புகைப்படங்களை தேடி தேடி சேகரித்து வைத்த அந்த சிறுவனின் கனவுக்குள்ளிருந்து அவனின் பிஞ்சு விரல்களை கொண்டே எழுதி சொல்கிறேன் . உங்கள் வாழ்த்திற்கும் அரவணைப்புக்கும் நன்றிகள் எங்கள் சூப்பர் ஸடார் அவர்களே” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.