ஜெயம்ரவி - ஆர்த்தி முகநூல்
சினிமா

”ஆர்த்தி உடனான திருமண வாழ்விலிருந்து விலகுகிறேன்; இது எளிதில் எடுத்த முடிவல்ல”- ஜெயம் ரவி அறிவிப்பு

ஜெனிட்டா ரோஸ்லின்

பிரபல நடிகர் ஜெயம்ரவி, தனது மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்விலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ரவி.. இத்திரைப்படத்திற்கு பிறகே, ”ஜெயம் ரவி” என்ற பெயர் பெற்றார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை மணந்து கொண்டார்.தற்போது, இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளன.

” நல்ல ஜோடி, கியூட் ஜோடி” என்று பெரும்பாலானவர்களால் அழைக்கப்படும் ஜெயம் ரவி - ஆர்த்தி இடையே சில நாட்களாகவே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இதனால், இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் செய்திகள் பல வெளியாகின.

இதை மெய்ப்பிக்கும் வகையிலே, இன்ஸ்ட்ராகிமில் ஜெயம் ரவியுடன் எடுத்த புகைப்படங்களை நீக்குவது, அவரை unfollow செய்வது, தன் மகன்களுடன் இருக்கும் படங்களை நீக்குவது என பல சமிக்சைகளை வெளிக்காட்டி வந்தார் ஆர்த்தி.

ஆனால், பிரிந்து வாழ்வது குறித்து இருவரும் வெளிப்படையாக பதிலளிக்காமல் இருந்தனர்.

இந்நிலையில்தான், ”இது வெறும் வதந்திதான்” என்று சந்தோஷமடைந்த ஜெயம் ரவியின் ரசிகர்களுக்கு பெரும் இடியை ஏற்படுத்தும் விதமாக இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் நடிகர் ஜெயம்ரவி..

அதில், இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், தங்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படியும் தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம் ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும்,

திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன்.

இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன் என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே' தான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி." என்று அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

தனுஷ் ஐஸ்வர்யா, நாக சைதன்யா - சமந்தா, ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி, ஹர்த்திக் பாண்டியா - நடாசா என தொடர்ந்து பிரபலங்கள் பலரும் சமீபகாலமாக விவாகரத்து பெற்று வரும் சூழலில், ஜெயம் ரவி - ஆர்த்தி பிரிந்து வாழ இருப்பதாக எடுத்துள்ள இந்த முடிவு ரசிகர்களுக்கு , “இது கனவாக இருக்க கூடாதா” என்று எண்ணும் அளவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், விவாகரத்து என்பது ஒவ்வொருவரது தனிப்பட்ட விருப்பமே. யாருடன் சேர்ந்து வாழ வேண்டும், மனம் ஒத்துப்போகவில்லை என்றால் பிரியலாம் என்ற உரிமை எல்லா தனி நபர்களைப் போலவே அவர்களுக்கும் உண்டுதானே!!