சினிமா

“இளையராஜாவுக்கு ராயல்டி கொடுத்துள்ளோம்” - 96 படக்குழு தரப்பு

webteam

96 படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தியது தவறான விஷயம் என இளையராஜா கூறியிருந்த நிலையில் அதற்கு படக்குழு தரப்பு விளக்கம் அளித்துள்ளது.   

கச்சேரிகளில் அனுமதி இல்லாமல் தனது பாடல்களை பாட இசையமைப்பாளர் இளையராஜா எதிர்ப்பு தெரிவித்து வருவது அனைவரும் அறிந்ததே. பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வெளிநாடுகளில் நடந்த கச்சேரிகளில் தனது இசையில் உருவான பாடல்களை பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸூம் அனுப்பினார். ஆனால் கோயில்கள், திருமண விழாக்கள், தொண்டு நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் பாடுவதற்கு ராயல்டி வசூலிக்கப்படுவதில்லை.

இதனிடையே தற்போது தமிழில் வெளியாகும் வரும் பல படங்களில் இளையராஜாவின் பழையப் பாடல்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. சமீபத்தில் வெளியான 96 மற்றும் மெஹந்தி சர்க்கஸ் போன்ற படங்களில் கூட அதிகமாக இளையராஜா பாடல்களும் அவரது பெயரும் பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து இளையராஜாவிடம் கேட்டபோது அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். அதாவது, ‘இது மிகவும்  தவறான விஷயம். 80களில், 90களில் இடம்பெறும் பாடல் என்றால் ஏன்  நான் இசையமைத்த பாடல்களை வைக்கவேண்டும்?. அந்தப்படத்தின் இசையமைப்பாளரே அந்த காலத்திற்கு ஏற்றார்போல ஒரு பாடலை இசையமைக்க வேண்டியதுதானே? இது அவர்களின் இயலாமை மற்றும் ஆண்மை இல்லாத தனம்’ எனச் சாடினார்.

இளையராஜாவின் இத்தகைய கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இளையராஜாவின் கருத்தை ஆதரித்து ஒருவர் பதிவு வெளியிட்டிருந்தார். அதில், இளையராஜாவின் பாடலை பயன்படுத்துவதற்கு முன் அவரது அனுமதியை பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். 

அதற்கு 96 படத்தில் பணிபுரிந்த ஒருவர் பதில் அளித்துள்ளார். அதில், “நான் 96 படத்தில் பணிபுரிந்துள்ளேன். நாங்கள் பயன்படுத்திய ஒவ்வொரு இளையராஜா பாடலுக்கும் அவர் அனுமதியுடன் ராயல்டி கொடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.