kannada actor Suraj Kumar aka dhruwan dhruwan instagram
சினிமா

விபத்தில் வலது காலை இழந்த கன்னட இளம் நடிகர்.. டிராக்டரை முந்த முயன்ற போது நிகழ்ந்த சோகம்!

சங்கீதா

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மறைந்த ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா. இவரின் நெருங்கிய உறவினரும், கன்னட திரையுலகின் பிரபல தயாரிப்பாளருமான எஸ்.ஏ. ஸ்ரீனிவாஸ் என்பவரின் மகனான 24 வயது சூரஜ் குமார், தனது இருசக்கர வாகனத்தில், கடந்த சனிக்கிழமை மைசூரிலிருந்து உதகைக்கு சென்றுள்ளார். பேகுர் அருகே மைசூரு-குண்ட்லுபேட் தேசிய நெடுஞ்சாலையில் மாலை 4 மணியளவில் சென்றுக்கொண்டிருந்தப்போது, டிராக்டரை முந்தி செல்ல முயன்றுள்ளார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த அவரது இருசக்கர வாகனம் எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சூரஜ் குமார், உடனடியாக மைசூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், மருத்துவர்கள், சூரஜ்குமாரின் உயிரை காப்பாற்றும் பொருட்டு, பலத்த சேதமடைந்த அவரது வலது காலின் முழங்காலுக்கு கீழே இருந்த பகுதியை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வரும் சூரஜ் குமாரை, கன்னட நடிகர் சிவராஜ் குமார் மற்றும் அவரது மனைவி நேரில் சென்று பார்த்துள்ளனர். 24 வயதான சூரஜ் குமார் திரையுலகிற்காக தன் பெயரை துருவன் என்று மாற்றிக் கொண்டார். இயக்குநர் அனூப் ஆண்டனி இயக்கத்தில் ‘பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா’ என்றப் படத்தில் சூரஜ் குமார் நடித்திருந்தார். ஆனால் இந்தப் படம் சில காரணங்களால் வெளியிடப்படவில்லை.

தற்போது ‘Ratham’ என்றப் புதிய படம் ஒன்றில் சூரஜ் குமார் நடித்து வருகிறார். மேலும், நடிகர் சூரஜ் குமார் பெயரிடப்படாத புதியப் படம் ஒன்றில், மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்வுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியிருந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.