சினிமா

லசித் மலிங்கா மீது குற்றச்சாட்டு வைத்துள்ள சின்மயி

webteam

இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா, யாரென்று தெரியாத பெண் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பாடகி சின்மயி குற்றம்சாட்டியுள்ளார்.

திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை மீடூ என்ற ஹேஸ்டேக் மூலம் அம்பலப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாடகி சின்மயி, அண்மையில் பாடலாசிரியர் வைரமுத்து மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சின்மயினுடைய குற்றச்சாட்டை அவரது தாயாரும் உறுதி செய்துள்ளார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை வைரமுத்து மறுத்துள்ளார். அத்துடன் உண்மையை காலம் சொல்லும் என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த மறுப்பிற்கு, வைரமுத்து ஒரு பொய்யர் எனக்கூறி சின்மயி விளக்கமளித்துள்ளார். இவ்வாறு இந்த விவகாரம் தமிழக திரைத்துறையில் ஒரு சர்ச்சையை ஏற்படுத்த, பலரும் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல் வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் பலர் குரல் எழுப்பி வருகின்றனர். 

இந்த விவகாரம் ஒருபுறம் இருக்க, இதற்கிடையே இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா மீதும் சின்மயி பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மற்ற பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை சின்மயிக்கு ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பெண் ஒருவர் எழுதி அனுப்பிய பதிவை, சின்மயி பகிர்ந்துள்ளார். அதில் “சில வருடங்களுக்கு நான் மும்பை சென்றிருந்த போது, எனது தோழியை அவர் தங்கியிருந்த ஓட்டலில் தேடிச்சென்று சந்தித்தேன். அப்போது பிரபல இலங்கை கிரிக்கெட் வீரரை நான் பார்த்தேன். அவர் எனது தோழி அவரது அறையில் இருப்பதாகக் கூறினார். நான் உள்ளே சென்று பார்த்தேன். உடனே மலிங்கா என்னை அவரது படுக்கையில் தள்ளி, தவறாக நடந்துகொள்ள முயன்றார். அந்த நேரத்தில் ஓட்டலின் ஊழியர் வந்து கதவைத்தட்ட நான் அங்கிருந்து சென்றுவிட்டேன்” என்று உள்ளது. இந்த தகவலை பகிர்ந்து, அது இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா என்று சின்மயி தெரிவித்துள்ளார்.