சினிமா

‘பஞ்சாப்பிலும் தமிழ் பரவுகிறது’ : ஏ.ஆர்.ரகுமான்

webteam

பஞ்சாப்பிலும் தமிழ் பரவுகிறது என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மரியான் பாடலை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘மரியான்’. பரத் பாலா இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. ‘இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ?’ என்ற மெலோடி பாடல் அனைவரது மனதையும் இசையாலும் வரிகளாலும் ஈர்த்தது. இந்தப் பாடலை மறைந்த கவிஞர் வாலி எழுதியிருந்தார், விஜய் பிரகாஷ் பாடியிருந்தார். 

இந்தப் பாடல் உலகம் எங்கும் உள்ள தமிழர்களையும் கடந்து பல மொழியினரையும் கவர்ந்தது. அதன்படி, பஞ்சாப் சிங் ஒருவர் தமிழில் இந்தப் பாடலை ஆரவத்துடன் பாடியுள்ளார். அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஏ.ஆர்.ரகுமான் பஞ்சாபிலும் தமிழ் பரவுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி, மூன்று மொழிக் கொள்கையை கடைபிடிக்க பரிந்துரைக்கப்‌பட்ட்டது. அதன்படி இந்தி மொழி இல்லாத மாநிலங்களில் இந்தி பாடத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல, இந்தி மொழி பேசும் மாநிலங்களில், இந்தி, ஆங்கிலம் தவிர பிற பகுதிகளில் ஏதேனும் ஒரு மொழியை கூடுதலாக கற்பிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மும்மொழிக் கொள்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் #StopHindiImposition, #TNAgainstHindiImposition ஆகிய இரண்டு ஹேஷ்டேக்குகளும் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகின. ஒருபடி மேலாக சென்று #StopHindiImposition உலக அளவில் ட்ரெண்டிங்கில் மூன்றாம் இடத்தை பிடித்தது. இந்நிலையில் பஞ்சாபிலும் தமிழ் பரவுகிறது என ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டுள்ளார்.