வணிகம்

"பதவி முக்கியமில்லை... பணிதான் முக்கியம்" - டாடா நிறுவனம்

webteam

ஊழியர்களின் பதவிகளில் பல்வேறு மாறுதல்களை கொண்டு வந்துள்ள டாடா மோட்டர்ஸ் நிறுவனம், இதன்மூலமாக நிறுவனத்தின் வளர்ச்சியில் ஊழியர்களின் கவனம் மேம்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தில் இதுவரை பொதுமேலாளர், மூத்த மேலாளர், துணை மேலாளர், இணை மேலாளர் என சுமார் 14 வகையான பதவிநிலைகள் இருந்து வந்தது. இவ்வாறு பல பதவி நிலைகள் உள்ளதால் ஊழியர்கள் தங்கள் பதவியின் மீது மோகம் கொண்டு, பணியில் கோட்டை விட்டு விடுவதாகவும், இதனால் நிறுவனத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையை மாற்ற தற்போது நடைமுறையில் உள்ள 14 வகையான பதவிநிலைகளை 4 வகையான பதவிநிலைகளாக அந்நிறுவனம் குறைத்துள்ளது. இந்த சீர்த்திருத்தத்தால் ஊழியர்களிடம் பதவிமோகம் குறைந்து பணியில் கவனம் அதிகரிக்கும் எனவும் அந்நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு பிரிவின் தலைவர் கஜேந்திரா எஸ்.சந்தல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இனிமேல் அடையாள அட்டையில் பெயர், எந்த பிரிவு, என்ன வேலை என்பது மட்டும் தான் குறிப்பிடப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அதிரடி முடிவை ஒரு தரப்பு ஊழியர்கள் வரவேற்றாலும், மற்றொரு சார் ஊழியர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. உயர்பதவிகள் இருந்தால் தான் ஊழியர்களிடம் ஒரு போட்டி மனப்பான்மை வெளிப்படும் என்றும், அதன்மூலமாக நிறுவனம் வளர்ச்சியடையும் என்பது தான் அதிருப்தியாளர்களின் வாதம் என்பது குறிப்பிடத்தக்கது.