வணிகம்

நெல்லை: அரசு விதித்த கட்டுப்பாடுகளால் சிறு விநாயகர் சிலைகளின் விற்பனை குறைவு

நிவேதா ஜெகராஜா

நாளைய தினம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் கொரோனா காரணமாக அரசு விதித்த கட்டுப்பாடுகளால் நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சிலை விற்பனை வெகுவாக குறைந்து இருக்கிறது.

நாடு முழுவதும் நாளைய தினம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் கட்டுப்பாடுகளுடன் நடக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசும் தமிழகத்தில் குழுக்களாகவும் அமைப்புக்களாகவும் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதித்துள்ளது.

மேலும் சிறிய அளவிலான சிலைகளை தனி நபர்கள் தங்களது வீடுகளில் வைத்து வழிபட்டு நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் எனக்கூறி, இதுதொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது.

இதன் காரணமாக மிகப் பெரிய விநாயகர் சிலைகளின் விற்பனை ஏற்கெனவே பாதித்த நிலையில், தற்போது சிறு சிலைகளின் விற்பனையும் பாதித்துள்ளது. தமிழக அரசு கொடுத்த அறிவுறுத்தலின்படி ஒன்றரை அடி உயர விநாயகர் சிலைகளை கடந்த சில தினங்களாகவே விநாயகர் சிலை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் செய்து வந்தனர். எனினும் நாளைய தினம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையிலும்கூட சிலைகளின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளதாகவும், அரசு விதித்த கட்டுப்பாடுகள் காரணமாகவும் இதன் விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.

சிலை விற்பனை மட்டுமன்றி, அத்தோடு சேர்த்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தேவையான பொருட்களின் விற்பனையும் கணிசமாக குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

- நெல்லை நாகராஜன் | ஒளிப்பதிவு: நாராயணமூர்த்தி