வணிகம்

ஜிஎஸ்டி விகிதங்களில் மறுபரிசீலனை அவசியம்: ஹஸ்முக் ஆதியா

webteam

ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்து ஓரளவு நிலைபெற்று விட்ட சூழலில், சாமானியர்கள், சிறுவணிகர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் வரி மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று மத்திய வருவாய்த் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், ஜிஎஸ்டி கணக்கு தாக்கல், ஏற்றுமதியாளர்கள் தொகையை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட சில பிரச்னைகள் இப்போது பெருமளவு குறைந்துள்ளதாக கூறியுள்ளார். அதிகாரமிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்கள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களின் வரிகள் குறைக்கப்பட்டதாக கூறிய ஆதியா, சாமானியர்கள், சிறுவணிகர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் வரிகளை மீள்பார்வை செய்ய வேண்டிய தேவை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பொருட்கள் மற்றும் சேவைகள் பிரிக்கப்பட வேண்டும் என்றும் ஹஸ்முக் ஆதியா தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி குறித்து திரைப்படங்களில் கூட விமர்சனக் காட்சிகள் இடம்பெறும் நிலையில், மத்திய வருவாய்த் துறை செயலாளரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.