வணிகம்

நடப்பு நிதியாண்டு வளர்ச்சி 9% க்கு கீழே இருக்கும்: கேர் ரேட்டிங்ஸ் ஆய்வில் தகவல்

நிவேதா ஜெகராஜா

கொரோனாவின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதால், நடப்பு நிதி ஆண்டின் வளர்ச்சி 9 சதவீதத்துக்குள் இருக்கும் என கேர் ரேட்டிங்ஸ் (Care Ratings) நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. பல மாநிலங்கள் லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதித்திருப்பதால், இதன் பாதிப்பு பொருளாதாரத்திலும் எதிரொலிக்கும் என இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

அதேபோல நடப்பு நிதி ஆண்டில் அவசியம் இல்லாத பொருட்களுக்கான தேவையும், புதிய முதலீடுகளும் குறையும் என தெரிவித்திருக்கிறார். இந்த சர்வேயில் கலந்துகொண்ட 10-ல் ஏழு நபர்கள் நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி 9 சதவீதத்துக்கு கீழ் இருக்கும் என்றே தெரிவித்திருக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு பல ரேட்டிங் ஏஜென்சிகளும், தர மதிப்பீட்டு நிறுவனங்களும் இந்தியாவின் நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி 12 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என கணித்தன. ஆனால், கோவிட் தொற்று அதிகரிக்கும் வேகம், அதனால் ஏற்படும் இழப்புகளால் நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சியை தொடர்ந்து குறைத்துக்கொண்டே வருகின்றன.

கிரிசில் நிறுவனம் நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சியை இரு வகையில் கணித்திருக்கிறது. மே மாதத்துக்கு கொரோனா இரண்டாம் அலை உச்சத்தை எட்டும் பட்சத்தில் நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி 9.8 சதவீதமாக இருக்கும் என கிரிசில் கணித்திருக்கிறது. ஒருவேளை ஜூன் மாத இறுதிவரை கொரோனா இரண்டாம் அலை இருக்குமேயானால் நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி 8.2 சதவீதமாக குறையும் என கணித்திருக்கிறது.

மூடி'ஸ் நிறுவனம் நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி 9.3 சதவீதமாக இருக்கும் என கணித்திருக்கிறது. முன்னதாக 13.7 சதவீதம் அளவுக்கு நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி இருக்கும் என கணித்திருந்த நிலையில் பெருமளவுக்கு வளர்ச்சிக்கான கணிப்பை மூடி'ஸ் குறைத்திருக்கிறது. அதேபோல நாட்டின் தரமதிப்பீட்டை இப்போதைக்கு உயர்த்த முடியாது என்றும் தெரிவித்திருக்கிறது.