வணிகம்

பட்ஜெட் தாக்கம்: ஏற்றத்தில் பங்குசந்தைகள்

webteam

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அம்சங்களின் தாக்கத்தால் மும்பை பங்குச் சந்தை கடந்த ஜனவரி 20 முதல் பிப்ரவரி 6 வரையில் 4.9 சதவீதம் ஏற்றம்கண்டுள்ளது.

நூற்றாண்டுகால மரபை மாற்றி முதல்முறையாக மத்திய பட்ஜெட் பிப்ரவரி முதல் தேதியில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், ரயில்வே பட்ஜெட்டுக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முறைக்கும் இந்தாண்டு முதல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. நிதியமைச்சர் அருண்ஜெட்லி பட்ஜெட்டை முன்னதாகவே தாக்கல் செய்துள்ளதால் பட்ஜெட் அறிவிப்புகள் ஏப்ரல் 1ம் தேதி முதலே அமலுக்கு வரும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளால் பங்குசந்தைகள் ஜனவரி இறுதியில் இருந்தே ஏற்றம் காணத் தொடங்கின. குறிப்பாக, மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண்ணான சென்செக்ஸ் ஜனவரி 20-ல் 27034.5 புள்ளிகளை எட்டியது. இந்த எண்ணிக்கை பிப்ரவரி 6-ல் 28439.28 புள்ளிகளில் முடிந்தது. ஜனவரி 20 - பிப்ரவரி 6 வரையிலான காலகட்டத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண்ணான சென்செக்ஸ் 1404.78 புள்ளிகள் அல்லது 4.9 சதவீதம் உயர்வு கண்டுள்ளது. வங்கி துறையைப் பொறுத்தவரை பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி போன்றவைகளின் பங்குகளும், ஆட்டோமொபைல் துறையில் மாருதி சுசூகி நிறுவனத்தின் பங்குகளும், தொலைதொடர்பு துறையில் பர்தி ஏர்டெல் நிறுவன பங்குகளும் ஏற்றம் கண்டன.