FARMER PRODUCER ORGANISATION  face book
விவசாயம்

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் திட்டம் (FPO) என்பது என்ன? முழு விவரம்!

PT WEB

விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்களின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய வருமானம் கிடைப்பதை உறுதி செய்து பொருளாதார வலிமையை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் FARMER PRODUCER ORGANISATION எனப்படும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் திட்டம். இதுபோன்று நாடு முழுவதும் 10,000 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை தொடங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

FARMER PRODUCER ORGANISATION

இதற்காக, பல்வேறு ஊக்க சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை தொடங்கி நடத்துவதற்காக 3 ஆண்டுகளுக்கு 18 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிறுவனத்திலும் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் இணைக்கப்பட்டால் அவர்களுக்கு பங்கு மானியமாக 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், அதிகபட்சமாக 750 உறுப்பினர்கள் வரை இந்த மானியம் வழங்கப்படுகிறது.

FPOக்களை வழிநடத்துவதற்காக தொடங்கப்படும் CBBOஎனப்படும் நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதுதவிர, National AGRICULTURE INFRA FINANCING FACILITY மூலம் 2 கோடி ரூபாய் வரை பிணையில்லாத, 4 சதவிகித வட்டியுடன் கூடிய கடனுதவியும் வழங்கப்படுகிறது. இதில், வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கு மூலதன மானியமாக, அவைகளின் விலையில் 50 முதல் 60 சதவிகிதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

Farming

இவ்வளவு ஊக்கச்சலுகைகள் வழங்கப்பட்டு வந்தாலும் “இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மத்திய மாநில அரசுகள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை” எனக் கூறுகிறார் ஒரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரஞ்சித்குமார். விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர்.

ஆனால், அவர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதை அரசு எடுத்து செய்ய வேண்டும் என உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். தமிழகத்திற்கு மட்டும் இத்திட்டத்திற்காக 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நிதியில் கால் பங்கை கூட விவசாயிகள் பயன்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

FARMER PRODUCER ORGANISATIONS

எனவே, விவசாயிகளிடம் முழுமையாக சென்று சேரும் வகையில் இந்தத் திட்டத்தில் உள்ள சிக்கல்களை சரிசெய்து உரிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினால், உற்பத்தி அதிகரித்து வேளாண் விளைபொருட்களின் விலை குறைய வாய்ப்பு ஏற்படும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு அப்போது தானாகவே விடை கிடைக்கும்.