All Eyes On Rafah | கூட்டம்கூட்டமாக வெளியேறும் பாலஸ்தீனிய மக்கள்.. இஸ்ரேலுக்கு வலுக்கும் கண்டனங்கள்!
All Eyes On Rafah - அதாவது ‘அனைவரின் கண்களும் ரஃபா மீதே உள்ளது’ - என்ற இந்த வசனம், நேற்று இரவு முதல் உலகம் முழுவதிலுமிருந்து பலராலும் சமூகவலைதளங்களில் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது.
போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் அமைந்துள்ள ரஃபா நகரில் வசிக்கும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இந்த ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
இந்த வாசகம் இருப்பது போன்ற ஒரு புகைப்படமும் ட்ரெண்டாகிறது. இதன் பின்னணி என்ன? அறியலாம்...
All Eyes On Rafah - வின் பின்னணி என்ன?
இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால் காசாவின் ரஃபா நகரில் இருந்து பொதுமக்கள் உயிரை காத்துக்கொள்ள வெளியேறி வருகின்றனர். காசாவில் நடக்கும் போரில் வீடு இழந்தவர்கள் தங்கி இருந்த கூடாரங்கள், ரஃபாவில் இருந்தது. இப்போது இந்தக் கூடாரங்களின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் நேற்று மட்டும் குழந்தைகள், பெண்கள் என 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இந்த தாக்குதல் தொடரக்கூடும் என்ற அச்சத்தில், அங்கிருந்த பாலஸ்தீன மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.
இதையடுத்து, All Eyes of Rafah என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. இந்தியாவில் நடிகர்கள் வருண் தவான், சமந்தா, ஏமி ஜாக்ஸன், பிரியங்கா சோப்ரா, ராஷ்மிகா மந்தனா, ஸ்வரா பாஸ்கர், ஆலியா பட், கரீனா கபூர் போன்றோரும் இந்த ஹேஷ்டேகை பதிவிட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகாவும் இதுதொடர்பாக இன்ஸ்டாவில் ஸ்டோரி பதிவிட்டிருந்தார். ஆனால் அதற்காக அவர் ட்ரோல் செய்யப்பட்டதை அடுத்து, அவர் அதை டெலிட் செய்துள்ளார்.
இஸ்ரேலுக்கு வலுக்கும் கண்டனங்கள்!
இதற்கிடையே காசா-எகிப்து எல்லையில் உள்ள ரஃபா நகரில் கூடாரங்கள் அமைத்து வசித்து வருவோர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், இஸ்ரேலுக்கு எதிராக கடும் எதிர்விணையை ஆற்றியுள்ளது. பல்வேறு நாடுகள் இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறது. கடந்த வாரம் ஐ.நா. உயர்மட்ட நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, இஸ்ரேலியப் படைகள் தங்கள் தாக்குதலை நடத்தியுள்ளதால் உலகளவில் இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஃபா நகரில் இருந்து வெளியேறும் மக்கள், கான் யூனிஸ் நகரில் குடியேறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலுக்கு மத்தியிலும் அவர்கள் குடும்பத்தினருடன் வாகனங்களில் பொருட்களுடன் வெளியேறுகின்றனர்.
இதற்கிடையில், இஸ்ரேல், இந்த கொடூரமான தாக்குதலை "ஒரு சோகமான விபத்து" என்று கூறியிருக்கிறது. இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டிருக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம், "பொதுமக்கள் உயிரிழப்பைக் குறைக்க நாங்கள் முயற்சித்த போதிலும், நடந்த இந்த சம்பவம் எதிர்பாராதது மற்றும் உள்நோக்கம் அற்றது.
இவ்வளவு பெரிய தீ அங்கு பற்றி எரிவதற்கு என்ன காரணம் என்பதைத் எங்கள் விசாரணையானது கண்டுபிடிக்க முயல்கிறது" என்றுள்ளது. இது மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.