கவுதமலாவில் அதிபர் தனக்கு எதிரான ஊழல் வழக்கை விசாரித்து வந்த ஐ.நா.வின் ஊழல் தடுப்பு ஊழல் விசாரணை அதிகாரியை வெளியேறச் சொன்னதற்கு, உலக அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆணையரை நாட்டை விட்டு வெளியேறும்படி அதிபர் ஜிம்மி மாரேலஸ் உத்தரவிட்டது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் அடுத்த சில மணி நேரங்களுக்குள் அவரது உத்தரவுக்கு கவுதமாலா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய அதிபர் ஜிம்மி மாரேல்ஸ், ஊழல் தடுப்பு ஆணையரை வெளியேறும்படி பிறப்பித்த உத்தரவை நியாயப்படுத்தினார். வெளியுறவு கொள்கையை காக்கும் பொறுப்பு அரசுக்கு மட்டுமே இருப்பதாகவும், நீதிமன்றம் இதில் தலையிடக் கூடாது எனவும் பேசினார். இந்நிலையில் தான் செய்த ஊழலை மறைக்கவே அதிபர் ஜிம்மி இந்த உத்தரவை பிறப்பித்தார் எனக் கூறி, ஆயிரக்கணக்கான மக்கள் கவுதமாலா நகரில் ஒன்று கூடிப் போராட்டம் நடத்தினர்.
2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது, ஜிம்மியின் பரப்புரைக்காக பல கோடி ரூபாய் அளவுக்கு பணம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை ஜிம்மி தொடர்ந்து மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.