இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் கணவரும், பிரிட்டிஷ் அரச குடும்ப இளவரசருமான பிலிப்பின் இறுதி ஊர்வலத்தில் 30 பேர் மட்டுமே கலந்துகொள்ளவுள்ளனர்.
பிரிட்டிஷ் அரச குடும்ப இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அவருக்கு வயது 99. நாளை (சனிக்கிழமை) அவரது இறுதி சடங்கு நடைபெற உள்ளது. அவரது இறுதி ஊர்வலம் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட லேண்ட் ரோவர் சொகுசு ரக காரில் நடைபெற உள்ளது. அந்தக் காரில் அவரது உடலை தாங்கி செல்லும் சவப்பெட்டி வைக்கப்படவுள்ளது. இந்தக் காரை அவரே மறுவடிவமைப்பு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தக் காரை அவர் மறுவடிவமைத்துள்ளார். அதுவும் இந்தக் காரில்தான் தனது இறுதி ஊர்வலம் அமைய வேண்டும் என நினைத்து, அவர் இதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பொதுமக்களுக்கு இந்த இறுதி ஊர்வலத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்தக் காட்சிகளை தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பவும் அரச குடும்பம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இளவரசரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்பவர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பிரிட்டனில் உள்ள கொரோனா வழிமுறைகளை இணங்க, இறுதிச் சடங்கில் 30 பேர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று அரச குடும்பம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 30 பேரில் ராணி எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப்பின் நான்கு குழந்தைகள் மற்றும் எட்டு பேரக்குழந்தைகள் அடங்குவர். மறைந்த இளவரசி மார்கரெட்டின் குழந்தைகள் மற்றும் இளவரசர் பிலிப்பின் கிரேக்க மற்றும் ஜெர்மன் குடும்ப உறுப்பினர்கள் இந்த 30 பேரில் உள்ளனர்.
மேலும், இறுதிச் சடங்குகள் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படும். இறுதி ஊர்வலத்தில் இளவரசர் ஹாரி மற்றும் இளவரசர் வில்லியம் இருவரும் ஒன்றாக நடக்க மாட்டார்கள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வின்ட்சர் டீன் என்பவர் இறுதிச்சடங்கு நிகழ்வுகளை நடத்த இருக்கிறார்.
அதேநேரத்தில், இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் பெயர் இந்தப் பட்டியலில் இல்லை. மேகன் சமீபத்தில் அரசு குடும்பம் மீது இனவெறி குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.