கலிபோர்னியா: “இனி தப்பித்தவறி கூட மலை ஏறமாட்டேன்” - 10 நாட்களாக காட்டுக்குள் சிக்கி மீட்கப்பட்டவர்!

கலிபோர்னியா: 3 மணி நேரத்தில் திரும்பிவிடுவேன் என்று கூறிவிட்டு மலை ஏறிச்சென்றவர், 10 நாட்களாக திரும்பாததால் அதிர்ச்சி; குடும்பத்தினர் தகவலின்பேரில் போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்ட நிலையில், முற்றிலும் மாறிய மனிதனாக அந்நபர் மீட்கப்பட்டுள்ளார்.
மெக்லீஷ்
மெக்லீஷ்கூகுள்
Published on

வடக்கு கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் மெக்லீஷ் . இவர் கலிபோர்னியா க்ரீக் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். இவரின் பொழுதுபோக்கு மலை ஏறுவது. இவர் வசிக்கும் வீட்டின் அருகில் சாண்டா குரூஸ் மலை இருப்பதால், அங்கு அடிக்கடி ஏறி வந்திருக்கிறார். இதனால் ஒவ்வொரு பாதையையும் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்.

ஆனால் என்னதான் நாம், வழிகளையும் இருப்பிடத்தையும் நன்கு தெரிந்து கொண்டிருந்தாலும், சிலசமயம் நமக்கு வழி தவறுவது இயல்புதான்... அதே போலதான் மெக்லீஷுக்கும் நடந்துள்ளது.

சம்பவத்தின்படி ‘சாண்டா குரூஸ் மலையின் அனைத்து வழித்தடங்களும் பாதைகளும் நமக்கு நன்கு தெரியும்’ என நினைத்துக்கொண்டு, மெக்லீஷ் தலையில் தொப்பி, காலில் பூட்ஸ் மற்றும் பேண்ட் மட்டுமே அணிந்துக்கொண்டு, “மூன்று மணிநேரத்தில் வந்துவிடுகிறேன்” என்று குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டு மலை ஏறியுள்ளார். ஆனால் எதிர்பாரா விதமாக ஏற்பட்ட காட்டு தீயினால் மரங்கள் கருகி... காட்டின் பாதையானது மறைந்துள்ளது.

அதனால், காட்டுக்குள் சென்ற மெக்லீஷ் திரும்பி வருவதற்கான பாதையை அறியமுடியாமல் திணறியிருக்கிறார். காடு முழுவதும் தெரிந்தவருக்கு திரும்பி வீடு செல்ல வழி தெரியவில்லை. இதனால் காட்டினிலேயே தனி ஒருவராய் தங்கி விட்டார் அவர். அங்கு கிடைத்த காட்டு பெர்ரிகளையும், நீரூற்றிலிருந்து தண்ணீரையும் குடித்து உயிர் பிழைத்து இருக்கிறார்.

இந்நிலையில் திரும்பி வருவதாக கூறி சென்ற மெக்லீஷ் சில நாட்களாகியும் வராததால் கவலைக்கொண்ட குடும்பத்தினர் போலீஸிடம் புகார் தெரிவித்தனர். உடனடியாக காவலர்களும் மெக்லீஷின் குடும்பத்தினரும் இணைந்து காட்டிற்குள் மெக்லீஷை தேடிச் சென்றுள்ளனர். அப்போது காட்டின் நடுப்பகுதியிலிருந்து “காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...” என்று மெக்லீஷின் குரல் கேட்டுள்ளது. ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்ற சரியான திசை தெரியாததால் அவரை தேடி சென்றவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்துள்ளது.

நீண்ட தேடுதலின் முடிவில், அதாவது கிட்டதட்ட பத்து நாட்கள் கழிந்த நிலையில் மெக்லீஷ் சாண்டா குரூஸ் கவுண்டியில் எம்பயர் கிரேடு சலைக்கும், பிக் பேசின் நெடுஞ்சாலைக்கும் இடையே இருந்த ரெட்வுட் மரங்களுக்கு இடையே மெக்லீஷை போலீஸார் கண்டு பிடித்தனர்.

அவரை பார்த்தது மகிழ்ச்சியடைந்த குடும்பத்தினர், பத்து நாட்களாக காட்டில் அவர் பட்ட துயரத்தை கேட்டுத் தெரிந்துக்கொண்டனர். தண்ணீரும் பழங்களும் அவர் உயிரை காப்பாற்றியதாக கூறியவர், “இனி என் வாழ்க்கையில் காட்டு பக்கமே செல்லமாட்டேன்” என்று கூறியதாக அங்குள்ள சில உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com