தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் திருநங்கை ! வீட்டை காலி செய்ய வற்புறுத்தும் உரிமையாளர்

தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் திருநங்கை ! வீட்டை காலி செய்ய வற்புறுத்தும் உரிமையாளர்
தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் திருநங்கை ! வீட்டை காலி செய்ய வற்புறுத்தும் உரிமையாளர்
Published on

தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதால் திருநங்கை வேட்பாளர் ஒருவரை அவரின் வீட்டு உரிமையாளர் வீட்டை விட்டு காலி செய்ய வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் தமிழகத்தில் ஒரேயொரு திருநங்கை வேட்பாளர் தான் சுயேச்சையாக களமிறங்குகிறார். 50 வயதான சுதா என்னும் திருநங்கை தென்சென்னை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் தேர்தலில் சுதா போட்டியிடுவதால், அவரின் வீட்டு உரிமையாளர் சுதாவை வீட்டை விட்டு காலி செய்ய வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது. அத்துடன் சுதாவின் வீட்டு உரிமையாளர் அதிமுகவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சுதா கூறும்போது, “ மந்தைவெளி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே கடந்த மூன்று ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். எனது வீட்டு உரிமையாளர் அதிமுகவை சேர்ந்தவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் என்னிடம் வந்து, ‘தேர்தலில் ஏன் போட்டியிடுகிறாய்’ என கேட்டார். அத்துடன்  தேர்தலில் போட்டியிடுவதால் வீட்டை விட்டு காலி செய்யுமாறும் கூறுகிறார். இதனைக் கேட்ட நான் உடைந்து போய்விட்டேன். என்னை போன்ற திருநங்கைகளுக்கு வாடகை வீடு கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.

திருநங்கைகள் தினந்தோறும் ஏராளமான பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். அவர்களின் பிரச்னைகளை வெளிக்கொண்டு வரவே தேர்தலில் போட்டியிட முடிவு செய்தேன். திருநங்கைகள் கல்வியை தொடர்வதில் இன்னும் சிரமம் நீடிக்கிறது. அப்படி படித்து பட்டம் பெற்றாலும் வேலை என்பது முற்றிலுமாக மறுக்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக சென்னை போன்ற நகரங்களில் தங்குவதற்கு கூடு வாடகை வீடுகளை எங்களுக்கு யாரும் தருவதில்லை.

நான் ஆங்கிலத்தில் மாஸ்டர் டிகிரி படித்தவள். இருந்தாலும் என்ன பயன்..? எல்லா இடங்களிலும் வேலை மறுக்கப்படுகிறது. அதனால் வீட்டு வேலைகளை செய்து வருகிறேன். தேர்தலில் போட்டியிடுவதன் மூலமாக திருநங்கைகள் சமூகத்தை பற்றி மக்கள் தவறாக நினைத்திருப்பதை மாற்ற விரும்புகிறேன். எல்லாவற்றிற்கும் மேலோக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு நன்றி. அவர்தான் எங்களை எல்லோரும் மதிக்கும் விதமாக திருநங்கை என குறிப்பிட்டார்.

மயிலாப்பூர் மந்தைவெளி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டேன். அப்போது மக்கள் மத்தியில் எனக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மக்களுக்கு அடிப்படை தேவையான குடிதண்ணீர் கிடைக்க பாடுபடுவேன். வெற்றி பெற்றால் பெண்களின் பாதுகாப்பு தான் என் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும்” என தெரிவித்தார்.

Courtesy: DT NEXT

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com