பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்த நபர் மீது நடவடிக்கை எடுக்கவும், பொய் வழக்கை திரும்ப பெறக் கோரியும் இளம்பெண்கள் ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் வசிக்கக்கூடிய சங்கீதா என்ற இளம்பெண் தனது தோழியுடன் திருப்பூர் பல்லடம் பகுதியில் உள்ள ஜே.ஜே.கார்மென்ட்ஸ் என்ற நிறுவனத்தில் கணிணி பிரிவில் பணிபுரிந்து வந்த நிலையில் நிறுவனத்தின் மேலாளர் சிவக்குமார் என்பவர் சங்கீதாவிற்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சங்கீதாவின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பிய சிவக்குமார், தான் கூறும் இடத்திற்கு தனியாக வர வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து சங்கீதா தனது தோழியுடன் பல்லடம் அருகே பச்சான்காட்டுபாளையம் பகுதியில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் சிவக்குமாரை சந்தித்துள்ளார்.
அப்போது சங்கீதாவிடம் சிவக்குமார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். உடனே சங்கீதாவும் அவரது தோழியும் பாதுகாப்பிற்காக எடுத்துச்சென்ற பெப்பர் ஸ்பிரே மற்றும் மிளகாய் பொடியை தூவி அவரை கயிறால் கட்டி போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். பின்னர் சிவக்குமார் மீது பல்லடம் காவல்நிலையத்தில் சங்கீதா புகார் அளித்த நிலையில், சங்கீதா மீது சிவக்குமார் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் சங்கீதா மற்றும் அவரது தோழி மீது பல்லடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டபோது சங்கீதாவின் தோழிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் அவர்கள் இருவரையும் தனிமைப்படுத்திக் கொள்ள நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்லடம் காவல்நிலையத்திற்கு கையெழுத்திட செல்லும்போது மேலாளர் சிவக்குமாரின் ஆதரவாளர்கள் தன்னை மிரட்டல் விடுத்து தடுப்பதாகவும், மேலும் தன் மீதான வழக்கு காவல்துறையினரால் தொடரப்பட்ட வழக்கு என்பதால் அதனை திரும்ப பெறக்கோரியும் சங்கீதா இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சங்கீதா, பல்லடம் காவல்துறையினர் சிவக்குமார் தரப்பிற்கு ஆதரவாக செயல்பட்டு எங்கள் மீது பொய் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்ததற்கு நியாயம் கிடைக்க வேண்டும். காவல்துறையினர் மத ரீதியாக மிரட்டல் விடுத்து முதல்தகவல் அறிக்கையில் கையெழுத்து பெற வைத்தனர் எனத் தெரிவித்தார்.