இறந்தவரின் உடலை புதைக்க விடாததால் சாலை மறியல்... போலீசாரை தாக்க முயற்சித்த உறவினர்கள்

இறந்தவரின் உடலை புதைக்க விடாததால் சாலை மறியல்... போலீசாரை தாக்க முயற்சித்த உறவினர்கள்
இறந்தவரின் உடலை புதைக்க விடாததால் சாலை மறியல்... போலீசாரை தாக்க முயற்சித்த உறவினர்கள்
Published on

மயான இடப் பிரச்சினை காரணமாக இறந்தவர் உடலை சாலையில் வைத்து போராட்டம்.. போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த கூடலூர் கிராமம் வள்ளுவ இனத்தை சேர்ந்தவர் கனகசபை வயது 76. இவர் வயது மூப்பின் காரணமாக நேற்று இறந்துவிட்டார். இந்நிலையில் கடந்த 200 ஆண்டுகளாக வள்ளுவ இன மக்கள் இறந்தால் திட்டக்குடி - விருத்தாசலம் மெயின் ரோட்டில் அருகில் கூடலூர் கிராமத்தில் புதைப்பது வழக்கம்.

இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரோட்டின் அருகில் சின்னதுரை மகன் சக்திவேல் என்பவர் வீடுகட்டி குடி அமர்ந்துள்ளார். தற்சமயம் சம்பந்தப்பட்ட வள்ளுவ இன மக்களை புதைக்கப்பட்டு வந்த இடத்தில் புதைக்கக் கூடாது என்று இரு தரப்பினருக்கும் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில், கனகசபையின் உடலை புதைப்பதற்காக சம்பந்தப்பட்ட இடத்திற்கு ஊர்வலமாக உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த நபர் இந்த இடத்தில் புதைக்கக் கூடாது என தடுத்து நிறுத்தி அவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து இறந்துபோன கனகசபையின் உடலை திட்டக்குடி விருத்தாசலம் சாலை வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த திட்டக்குடி காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமாதானமடைய மறுத்த ஊர் பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து திட்டக்குடி வட்டாட்சியர் செந்தில்வேலன், திட்டக்குடி துணைக் காவல்கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் சமூகநல பாதுகாப்பு தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறையினரும், காவல் துறையினரும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை செய்து இறந்துபோன கனகசபையின் உடலை அடக்கம் செய்வதற்கு கொண்டு செல்லும் போது போலீசார் ஒருவர் நிலைதடுமாறி கனகசபையின் உடலை கீழே விட்டுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்களுக்கும் காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து போலீசார் ஒருவரை கற்களால் பொதுமக்கள் தாக்க முயற்சித்தனர். இதனால் சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் திட்டக்குடி விருத்தாச்சலம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com