“ஓபிஎஸ் ஆஜரானால்தான் உண்மை வெளிவரும்” - சசிகலா தரப்பு

“ஓபிஎஸ் ஆஜரானால்தான் உண்மை வெளிவரும்” - சசிகலா தரப்பு
“ஓபிஎஸ் ஆஜரானால்தான் உண்மை வெளிவரும்” - சசிகலா தரப்பு
Published on

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானால் தான், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மைகள் வெளிவரும் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்த விசாரணை நடத்த மருத்துவக் குழுவை அமைக்க உத்தரவிடக்கோரி அப்போலோ மருத்துவமனை தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராகும்படி அப்போலோ மருத்துவர்கள், பணியாளர்களுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அப்போலோ நிர்வாகம் மேல்முறையீடு செய்திருப்பதால் மருத்துவர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என அப்போலோ வழக்கறிஞர்கள் ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவித்தனர். 

அப்போது, வரும் 25ஆம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் வழங்கும் தீர்ப்பை ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவ்வாறு இல்லையெனில் மருத்துவர்களை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி ஆறுமுகசாமி கூறினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகும் போது மொத்த முடிச்சுகளும் அவிழும் எனக் கூறினார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆணையத்தை பொறுத்தவரை நான் குறையே சொல்ல மாட்டேன். ஆணையர் விசாரித்து கொண்டிருக்கிறார். எனக்கு நம்பிக்கை இல்லையென்றால் நான் உயர்நீதிமன்றம் சென்றிருப்பேன். எனக்கு சில குறைபாடுகள் இருக்கிறது. எதுவும் தவறாக இல்லாத போது, ஓபிஎஸ் நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டார். ஆதாரம் கேட்டால் கொடுக்க மாட்டார். இங்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்பது அவருக்கு நன்றாக தெரியும். அவரே விசாரணை நகலை கேட்பார். அப்புறம் அவரே வேண்டாம் என்பார். 

விஜயபாஸ்கர் அன்று சொன்னார். ஆணையம் விசாரித்தால் நான் போகிறேன் ஆனால் முதல் குற்றவாளி நீ என்று ஓபிஎஸ்சை பார்த்து சொன்னார். விஜயபாஸ்கர் ஆணையத்திற்கு வந்து சென்றுவிட்டார். ஓபிஎஸ் வரவேண்டியது தானே? திமுக போட்ட வழக்கின் காரணமாகத்தான் மனம் கஷ்டப்பட்டு ஜெயலலிதாவிற்கு உடல்நலம் குன்றியது என்று எடப்பாடி பழனிசாமி தற்போது கூறுகிறார்.  இதைத்தானே நாங்களும் சொல்கிறோம்” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com