குமரி கடலில் திடீரென ஏற்பட்ட பேரலை.. படகில் அமர்ந்திருந்த மீனவருக்கு நேர்ந்த சோக முடிவு

குமரி கடலில் திடீரென ஏற்பட்ட பேரலை.. படகில் அமர்ந்திருந்த மீனவருக்கு நேர்ந்த சோக முடிவு
குமரி கடலில் திடீரென ஏற்பட்ட பேரலை.. படகில் அமர்ந்திருந்த மீனவருக்கு நேர்ந்த சோக முடிவு
Published on

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை கிராமங்களில் தொடர் கடற்சீற்றம் காரணமாக படகுகள் கவிழ்ந்து விபத்து. மீண்டும் ஒருவர் கடலில் மாயம். பல மணி நேர போராட்டத்திற்கு பின் மீனவரது உடல் சடலமாக மீட்பு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடற்கரை கிராமங்களில் கடற்சீற்றம் அதிகமாக இருந்து வந்தது. இந் நிலையில் இன்று அதிகாலை தூத்தூர் பகுதியை சேர்ந்த சஜின் என்பவருக்கு சொந்தமான காட் பிளஸ் டோபானியோ என்ற பெயரில் உள்ள ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகில் தூத்தூர் மண்டல மீனவ கிராமத்தை சேர்ந்த 11 மீனவர்கள் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

அப்போது படகின் மேல் பகுதியில் மார்த்தாண்டன் துறையை சேர்ந்த இக்னேஷியஸ் தோமஸ் மற்றும் தூத்தூரை சேர்ந்த தோமஸ், சின்னத்துறையை சேர்ந்த செலீன் குமார் ஆகிய மூவரும் நின்ற நிலையில் படகு துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் செல்லும் போது எதிராக வரும் அலையின் தாக்கத்தை கவனித்து கொண்டிருந்தனர்.

படகு துறைமுக முகத்துவாரத்தில் சென்று கொண்டிருந்த போது கடலில் திடீரென ஏற்பட்ட பேரலை படகின் மேல் பகுதியில் நின்று கொண்டிருந்த மூன்று பேரையும் தாக்கியுள்ளது. இதில் நிலைகுலைந்த மூன்று பேரும் கடலில் தூக்கி வீசபட்டுள்ளனர் அவர்களுடன் படகின் மேல் பகுதியில் இருந்த மீன்பிடிக்க பயன்படுத்தும் வலையும் கடலில் விழுந்துள்ளது.

அதில் தூத்தூரை சார்ந்த தோமஸ், சின்னத்துறையை சார்ந்த செலின் குமார் ஆகிய இருவரும் அலையுடன் போராடி நீந்தி கரை சேர்ந்துள்ளனர். ஆனால் மார்த்தாண்டன் துறையை சேர்ந்த இக்னேஷியஸ் தோமஸ் படகில் இருந்த வலையுடன் சேர்ந்து கடலில் விழுந்ததால் வலையில் சிக்கி மூழ்கியிருக்கலாம் என அஞ்சபடுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

அதேவேளையில் வலையானது துறைமுக அலை தடுப்புச் சுவரில் சிக்கிய நிலையில் கரையில் உள்ளது. இதன் அடியில் மாயமான மீனவர் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகமும் சக மீனவர்களிடையே ஏற்பட்டுள்ளதால் கடலரிப்பு தடுப்புச் சுவரில் சிக்கிய வலையை மீட்டால் மீனவரது உடலை எடுத்துவிடலாம் என மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.


இதனையடுத்து சம்பவ இடத்திற்கு குளச்சல் ஏஎஸ்பி பிஸ்வேஷ் சாஸ்திரி, கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் புதுக்கடை போலீசார் வந்து கடல் அலையில் சிக்கி இருக்கும் வலையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர் முதற்கட்டமாக அந்த பகுதிக்கு ராட்சத கிரைன் வரவழைக்கப்பட்டு அதன் மூலமாக வலையை மீட்க முயன்றனர் ஆனால் கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.


தொடரந்து நடைபெற்ற மீட்புப் பணியில் சக மீனவர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டதில் சுமார் 15 மணி நேர போராட்டத்திற்கு பின் அலை தடுப்புசுவரில் சிக்கி இருந்த மீன்பிடி வலையில் சிக்கி கடலில் மூழ்கி காணமல் போயிருந்த மார்த்தாண்டன்துறை மீனவரான இக்னேஷியஸ் தோமஸ{ம் வலையின் அடிபாகத்தில் சிக்கி இறந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.


இந்த சம்பவம் சக மீனவர்கள் இடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து மீட்கப்பட்ட மீனவரது உடலை உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 15 நாட்களுக்குள் தேங்காய்பட்டிணம் துறைமுகத்தில் 3 படகுகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 3 மீனவர்கள் கடலில் மூழ்கி மாயமாகினர் என்பது குறிப்பிடதக்கது அதில் ஒருவரது உடல் இதுவரை கண்டெடுக்கபடவில்லை என்பதும் வருத்தத்திற்குரியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com