தமிழக அரசுக்கு விதிக்கப்பட்ட100 கோடி அபராத தொகைக்கு தடை

தமிழக அரசுக்கு விதிக்கப்பட்ட100 கோடி அபராத தொகைக்கு தடை
தமிழக அரசுக்கு விதிக்கப்பட்ட100 கோடி அபராத தொகைக்கு தடை
Published on

சென்னையில் ஓடும் நதிகளை பராமரிக்கத் தவறியதாக தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னையில் ஓடும் கூவம், அடையாறு நதிகளையும், பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளை பராமரிக்க தமிழக அரசு தவறிவிட்டதாக ஜவஹர்லால் சண்முகம் என்பவர் மனுத் தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாயைத் தூர்வாரிப் பராமரிக்காமல் விட்டதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட காரணமான பொதுப்பணித்துறைக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. தொடர்ந்து ஏப்ரல் 23ஆம் தேதி தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜராக தீர்ப்பாயம் உத்தரவிட்டது. 

மேலும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராயவும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க மத்திய மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள், இந்திய அறிவியல் கழகம் (IASE), நீரி (NEERI) அமைப்பு, மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எகனாமிக்ஸ் ஆகிய நிறுவனங்களிடமிருந்து தலா ஒருவர் அடங்கிய குழுவை நியமித்து 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. 

இந்தச் சூழலில் இந்த அபராத உத்தரவை எதிர்த்து தமிழக பொதுப்பணித்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயை பராமரிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளாமலும், கூவம் நதியை சுத்தப்படுத்த 604 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருவதை கருத்தில் கொள்ளாமலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தமிழக அரசுத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் ஏற்கனவே தீர்ப்பாயம் 2 கோடி ரூபாய் அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதையும் அரசுத்தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும், மனுவுக்கு பதிலளிக்க பசுமைத் தீர்ப்பாயத்துக்கும், வழக்கு தொடர்ந்த ஜவகர்லால் சண்முகத்துக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com