உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்து ஏவக்கூடிய ‘சந்த்’ எனப்படும் தொலைவில் இருந்து தாக்கும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் இந்திய விமானப்படை இன்று (டிசம்பர் 11, 2021) பொக்ரான் எல்லையில் சோதனை செய்தன.
ஏவுகணையின் அனைத்து அம்சங்களும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன. அதிநவீன மில்லி மீட்டர் அலை ரேடார் தேடும் கருவி பொருத்தப்பட்டுள்ள இந்த ஏவுகணை, பாதுகாப்பான தூரத்தில் இருந்து துல்லியமாக தாக்கும் திறனை கொண்டுள்ளது. 10 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இலக்குகளை இந்த ஆயுதம் தாக்கும்.
டிஆர்டிஓ-வின் இதர ஆய்வகங்கள் மற்றும் தொழில் துறையுடன் இணைந்து ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மையம் இமாரத் இந்த சந்த் ஏவுகணையை வடிவமைத்து உருவாக்கியுள்ளது. தற்சார்பு இந்தியாவை நோக்கிய முக்கிய முன்னேற்றமாக இது உள்ளது.
இந்த பணியுடன் தொடர்புடைய குழுவிற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். சந்த் ஏவுகணையின் வெற்றிகரமான சோதனை உள்நாட்டுப் பாதுகாப்புத் திறனை மேலும் மேம்படுத்தும் என்று பாதுகாப்புத் துறையின் செயலாளரும் டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி கூறினார்.
இதையும் படிக்கலாம் : 'கிரிக்'கெத்து 13: ஆஸி.யை கூட்டு சேர்ந்து போட்டு தாக்கிய டிராவிட் - லக்ஷ்மன் இணையர்!