செய்தியாளர்: K.கருப்பஞானியார்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சோலைசேரியை சேர்ந்தவர்கள் பெருமாள் - விஜயசாந்தி தம்பதியினர். பெருமாள் இந்திய ராணுவத்தில் மருத்துவப் பணியாளராகவும், விஜயசாந்தி தளவாய்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்களது இரண்டாவது மகள் சாய் ஷிவானி (5), சத்திரப்பட்டி ஆண்டாள் புரத்தில் செயல்படும் தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்தார்.
வாடகை வேன் மூலம் பள்ளிக்குச் சென்று வந்த சிறுமி சாய் ஷிவானி, நேற்று பள்ளி முடிந்து சுமார் ஒருமணி நேரம் தாமதமாக வந்துள்ளார். அப்போது வேனில் இருந்து இறங்கிய சிறுமி தவறி கீழே விழுந்ததாக தெரிகிறது. இதை அறியாத ஓட்டுனர் ஜெகதீஸ்வரன் வாகனத்தை இயக்கியுள்ளார். இதில் சிறுமியின் மீது வேன் மோதியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த சிறுமியை மீட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து தகவலறிந்து வந்த சேத்தூர் ஊரக காவல் துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
வேன் ஓட்டுனரை கைது செய்துள்ள காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சோலைசேரி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.