நெல்லை: மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி அலுவலகம் மீது தாக்குதல்
நெல்லை: மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி அலுவலகம் மீது தாக்குதல்புதியதலைமுறை

ஜாதிமறுப்பு திருமணம்; CPM அலுவலகத்தை சூறையாடிய பெண்வீட்டார் - தாக்குதலுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்

ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த நிலையில், நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தை பெண் வீட்டார் தாக்கி சூறையாடினர். தாக்குதலில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
Published on

நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் சிபிஎம் கட்சி அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரம்,
9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணப்பெண்ணின் தாய், தந்தை உட்பட 13 பேரை கைது செய்த காவல்துறை. தாக்குதல் சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம்.

நெல்லையைச் சேர்ந்த உதய தாட்சாயினி மற்றும் மதன் குமார் ஆகிய இருவரும் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடிக்கு வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது.

நெல்லை: மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி அலுவலகம் மீது தாக்குதல்
”I LOVE YOU GUYS” - முதலீட்டாளர்கள் கூட்டத்தில் எலான் மஸ்க்கிற்கு ஜாக்பாட்; எகிறும் சொத்துமதிப்பு!

தகவல் அறிந்து கட்சிஅலுவலகத்துக்கு சென்ற பெண் வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் பெண் வீட்டாருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பெண் வீட்டார், கட்சி அலுவலகத்தின் கண்ணாடி, இருக்கைகள், கதவு என அனைத்தையும் அடித்து நொறுக்கினர். இந்த சம்பவத்தில், 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பெண்ணின் தந்தை முருகவேல், தாயார் சரஸ்வதி உள்பட 13 பேரை கைது செய்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு கட்சித்தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

”இன்றளவும் ஜாதிய தீண்டாமையால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனைக்குரியது”  - எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக பொதுச்செயலாளர்

”ஜாதி மறுப்பு திருமணம் நடத்தியதற்காக திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனம். தேசிய கட்சி அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியின் அலுவலகம் தாக்கப்படுவது என்பதே இந்த விடியா திமுக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கிற்கு அத்தாட்சி. சுயமரியாதை இயக்கம் தழைத்தோங்கிய தமிழ்நாட்டில், இன்றளவும் ஜாதிய தீண்டாமையால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனைக்குரியது.

நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தைத் தாக்கியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.” என்று தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது தாக்குதல் - டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம்

”இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் மீது தாக்குதல் - வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.!

இரு வேறு சாதிகளைச் சார்ந்த ஒரு இளம் தம்பதியருக்கு திருமணம் செய்து வைத்ததற்காக திருநெல்வேலி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் சூறையாடப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அண்மைக்காலமாக தென் மாவட்டங்களில் சாதிய படுகொலைகள், கூலிப்படை கலாச்சாரங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து ஒரு ஆணும் பெண்ணும் விரும்பி திருமணம் செய்து கொண்டதற்கு உதவிகரமாக இருந்ததற்குக் கூட நூறாண்டுக் காலம் பாரம்பரியமிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் தாக்கப்பட்டது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. இது ஆணவத்தின் உச்சக்கட்டம்.

இவ்வன்முறை சம்பவத்திற்கு காரணமான அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசை வலியுறுத்துகிறேன்.” என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

”போக்கை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்” - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

”திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, நம்பிக்கை நகரைச் சேர்ந்த மதன்குமார் (வயது 28), பெருமாள்புரத்தைச் சேர்ந்த உதயதாட்சாயினி (வயது 23) இணையர் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டனர். இந்த இணையருக்கு பொதுவுடமை இயக்கத் தோழர்கள் ஆதரவாக இருந்ததால் ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் மீது ஒரு கும்பல் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது.

அரசியல் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தும் போக்கை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடப்பதும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதற்குக் காரணமானவர்கள் மீது தமிழக காவல்துறை உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கண்டனத்தில் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே தன்னை விமர்சித்தவர்களையே கட்சியில் சேர்த்துக்கொண்டார் ஜெயலலிதா..ஆனால் எடப்பாடி” - சுமந்த் சி.ராமன்!

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com