பெரியபாண்டியனின் உடலில் பாய்ந்தது மற்றொரு போலீசின் துப்பாக்கி குண்டு..!

பெரியபாண்டியனின் உடலில் பாய்ந்தது மற்றொரு போலீசின் துப்பாக்கி குண்டு..!
பெரியபாண்டியனின் உடலில் பாய்ந்தது மற்றொரு போலீசின் துப்பாக்கி குண்டு..!
Published on

காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடலில் பாய்ந்தது மற்றொரு ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கி குண்டு என  ராஜஸ்தான் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடையில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையர்களை தேடி, தமிழகத்தில் இருந்து தனிப்படை காவலர்கள் ராஜஸ்தான் விரைந்தனர். கொள்ளையர்கள் குறித்த தகவல்களை சேகரித்தனர். 

3 கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து தனிப்படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். அங்கிருந்தவர்கள் தனிப்படை காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

பெரியபாண்டியனின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. 

இந்நிலையில், பெரியபாண்டியனின் உடலில் பாய்ந்தது மற்றொரு ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கி குண்டு என்ற தகவலை ராஜஸ்தான் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் மாநில பாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் பார்த்தவ், புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக இந்தத் தகவலை தெரிவித்தார்.

அவர் மேலும்  கூறும்போது, கொள்ளை கும்பலை தமிழக காவல்துறை சுற்றிவளைக்க முயன்றபோது, கொள்ளையர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். நான்கு போலீசார் அங்கிருந்து தப்பிய நிலையில் பெரியபாண்டியன் அவர்களிடம் சிக்கிக்கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற முனிசேகர், துப்பாக்கியால் சுட்டார். குண்டு தவறுதலாக பெரிய பாண்டியன் மீது பட்டுள்ளது. இதில் அவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்றுவருகிறது. இருவரது துப்பாக்கிகளும் தடயவில் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகளுக்கு பின்னர் இறுதி அறிக்கை அளிக்கப்படும்’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com